கொடுமைப்படுத்திய ராஜமௌலி... கண்களில் வெறித்தனம், கோபமான ஜூனியர் என்டிஆர்
ஹைதராபாத்: மார்ச் 25 ஆம் தேதி உலகம் முழுக்க பல மொழிகளில் நேரடியாக திரைக்கு வரவிருக்கும் படம் RRR. ராஜமௌலியின் இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் முதன்முறையாக இணைந்து நடிக்கும் பிரமாண்ட படம்.
மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். இப்படம் இந்தியாவில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும் படம் எனவும் சொல்லப்படுகிறது.
சமீபத்திய இன்டர்வியூ ஒன்றில் இப்படத்தில் நடித்த ஜூனியர் என்டிஆர் படத்தின் இயக்குனரான ராஜமௌலியின் மேல் தனக்கு வந்த கோபத்தை பற்றி அவரிடமே வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கான காரணத்தையும் சொல்லி இருக்கிறார்.

தோல்வி காணாத ராஜமௌலி
இயக்குனர் ராஜமௌலி 2001 ஆம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர் ஒன் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே சூப்பர்ஹிட். இதுவரை 11 படங்களை இயக்கியுள்ளார். ஒவ்வொரு படமும் அவரது முந்தைய படத்தின் வெற்றியை முறியடித்தது. ராஜமௌலி இயக்கிய 11 படங்களும் சூப்பர் ஹிட்டாகி தோல்வி படங்கள் தராத இயக்குனராக இன்றுவரை இருந்து வருகிறார். இயக்குனர் ஷங்கருக்கு பிறகு பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் வாங்கியுள்ளார்.

ஹீரோக்களை மிஞ்சிய புகழ்
பலகாலமாக தெலுங்கு பட உலகம் ஹீரோக்களின் கைகளில் இருந்து வந்தது. என்டிஆர், நாகேஸ்வரராவ், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜூனா, வெங்கடேஷ் போன்றவர்கள் கோலோச்சிய ஒரு காலம் இருந்து வந்தது. K விஸ்வநாத் போன்ற தலைசிறந்த இயக்குனர் இருந்தாலும் அவரால் ஹீரோக்களின் புகழை மிஞ்ச முடியாமல் இருந்திருக்கிறார். ராஜமௌலி வருகைக்குப் பிறகு அது முற்றிலுமாக மாறியது. ராஜமௌலி சூப்பர்ஸ்டார் ஹீரோக்களை இயக்கினாலும் அது ராஜமௌலி படம் என்றே சொல்லப்பட்டது. எந்த ஒரு ஸ்டார் ஹீரோவும் இல்லாமல் ஒரு " ஈ " யை வைத்து சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் ராஜமௌலி. RRR படத்தில் ஒரு R ராஜமௌலியை குறிப்பிடுகிறது.

அதிக சம்பளம்
தென்னிந்தியாவில் மட்டும் பெரும் புகழுடன் இருந்த இயக்குனர் ராஜமௌலி பாகுபலி முதல் பாகம் படத்தின் மூலம் இந்தியாவின் பெரும் இயக்குனர்களில் ஒருவராக மாறினார். பாகுபலி - 2 க்கு பிறகு இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குனரானார். பாலிவுட் அண்ணாந்து பார்க்கும் படி செய்தார் ராஜமௌலி. தற்போது திரைக்கு வர இருக்கும் RRR படம் இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது. RRR படத்தில் ராஜமௌலியின் சம்பளம் இந்தியாவில் வேறு எந்த இயக்குனரும் வாங்காத சம்பளம் என சொல்லப்படுகிறது. அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார் என சொல்லப்படுகிறது.

ராஜமௌலி மேல் கோபமான என்டிஆர்
RRR படத்தின் பிரமோஷனுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு இன்டர்வியூவில் ராஜமௌலி, ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் கலந்து கொண்டனர் . மிகவும் எதார்த்தமாக எடுக்கப்பட்ட அந்த இண்டர்வியூவில் RRR சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பற்றி மூவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ராஜமௌலி சூட்டிங் ஸ்பாட்டில் தன் மீது அதிக கோபம் வந்த தருணம் ஏதாவது இருக்கிறதா என இருவரையும் கேட்க, ராம் சரண் அப்படி குறிப்பிட்டு எதுவும் இல்லை என்பதுபோல சொல்ல என்டிஆர் தனக்கு ஏற்பட்டதாக சொல்கிறார். ஷூட்டிங்கில் கடினமான காட்சிகளில் நடக்கும் சமயத்தில் உடல் வலியில் நாங்கள் துடிக்கும் போது கூட உங்கள் கண்களில் எங்கள் மீது சிறிதளவுகூட பரிதாபம் தெரியாமல் இருக்கும்போது எனக்கு அப்படி ஒரு கோபம் வந்தது என மிகவும் நகைச்சுவையாக சொல்ல, அதை-அதே நகைச்சுவையோடு ராஜமௌலி ஏற்றுக் கொள்கிறார். அந்த முழு இன்டர்வியூவையும் ரசிகர்கள் மிகவும் ரசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











