சர்வதேச கவனத்தை ஈர்த்த சாத்தான்குளம் சம்பவம்.. பிரியங்கா, டாப்ஸி என பாலிவுட் பிரபலங்களும் கண்டனம்
சென்னை: சாத்தான்குளத்தை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு மரணம் அடைந்த சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
கோலிவுட் பிரபலங்களான கமல்ஹாசன், ஜெயம் ரவி, வைரமுத்து, ஜீவா, ராஷி கண்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
மேலும், பாலிவுட் பிரபலங்களான கங்கனா ரனாவத், பிரியங்கா சோப்ரா, டாப்ஸி உள்ளிட்ட பிரபலங்களும் இந்த கொடூரமான செயலை கண்டித்து ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டு வருகின்றனர்.

சர்வதேச கவனம்
ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை குரல் எழுந்தை போல, தற்போது சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் மரணத்திற்கு அமெரிக்காவில் கணவருடன் வசித்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா போட்ட ட்வீட் சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. பல வெளிநாட்டினரும் தங்கள் கண்டனத்தை எழுப்பி வருகின்றனர்.
பிரியங்கா கோபம்
நான் கேள்விப்பட்ட விசயங்கள், என்னை அதிர்ச்சியூட்டியும் கோபம் கொள்ளவும் செய்கின்றன. எவ்வளவு பெரிய தப்பே செய்திருந்தாலும், எந்த ஒரு மனிதர்களுக்கும் இப்படி ஒரு கொடுமையான தண்டனையை யாருமே கொடுக்க அனுமதி கிடையாது. இறந்தவர்களின் குடும்பத்தை எண்ணி கவலைப் படுகிறேன். நமது குரல் நீதி கேட்கும் வரை ஓயக் கூடாது என்று #JusticeForJayarajandBennicks போட்டு பிரியங்கா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
டாப்ஸி கண்டனம்
கோலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில், பாலிவுட்டில் பிசியாக இருந்தாலும், தமிழ்நாட்டை மறக்காமல் இருக்கும் நடிகை டாப்ஸியும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்திற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். அது குறித்த தகவல்கள் தன்னை பதற வைப்பதாக பதிவிட்டுள்ளார்.
கியாரா அத்வானி கண்டனம்
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் பிறப்புறுப்பில் லத்திகளையும் குச்சிகளையும் விட்டு, அந்த இடம் பிளக்கும் வரை காவல் அதிகாரிகள் இருவர் துன்புறுத்தியதையும், இருவரது ஆண் உறுப்பு சிதைக்கப்பட்டதையும் ஆங்கிலத்தில் பேசி வெளியிட்ட வீடியோவை ஷேர் செய்து "Absolutely horrific" என பதிவிட்டுள்ளார்.

சுசித்ரா விவாதம்
வட இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பிரபல பாடகி சுசித்ரா, இந்த விவகாரம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு, நடந்த அநீதிகளை வட இந்தியா மற்றும் சர்வதேச மக்களுக்கும் தெரியும் படி பேசி உள்ளார். அவர் ஆங்கிலத்தில் வெளியிட்ட வீடியோவை ஷேர் செய்தே பல பாலிவுட் பிரபலங்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











