கோடிகளை அள்ளி வீசும் அம்பானி! மகன் திருமணத்தில் பாட பாப் சிங்கருக்கு சம்பளம் எவ்வளவுனு தெரியுமா?
மும்பை: இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு வரும் 12ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது. ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டுக்கும் நடைபெறவுள்ள திருமண நிகழ்ச்சியில் பாடுவதற்காக உலகப் புகழ் பெற்ற பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் மும்பைக்கு வந்துள்ளார். இவருக்கு அம்பானி குடும்பத்தினர் பல கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளனர்.
முகேஷ் அம்பானியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானிக்கும், புகழ்பெற்ற தொழிலதிபர் வீரென் மெர்சண்டின் மகள் ராதிகா மெர்சண்டுக்கும் வரும் 12ஆம் தேதி திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் மையத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகின்றது.

கடந்த ஆறு மாதங்களாக நடைபெறும் இந்த திருமணக் கொண்டாட்டத்தில் இந்தியாவின் முன்னணி சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த முக்கியமானவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். நேற்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அதேபோல், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, குர்னால் பாண்டியாவின் மனைவி, இஷான் கிஷன் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியது.
ஜஸ்டின் பீபர்: ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டுக்குமான திருமணம் என்பது பல கட்டங்களாக கடந்த ஆறுமாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக திருமணத்தின் சங்கீத் நிகழ்ச்சியில் பாப் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக உலகப் புகழ் பெற்ற பாடகர் ஜஸ்டின் பீபர் மும்பைக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு அம்பானியின் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டு மும்பையில் பிரமாண்டமான ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார். ஆனந்த் அம்பானியில் திருமண நிகழ்ச்சியில் பாடுவதற்காக ஜஸ்டின் பீபருக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை அம்பானி குடும்பம் வழங்கி இருப்பது ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 83 கோடிகளுக்கும் மேல்.
திருமணக் கொண்டாட்டம்: ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் குஜராத்தில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டுக்குமான திருமணத்துக்கு முந்தைய மூன்று நாட்கள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் புகழ்பெற்ற அமெரிக்க பாடகி ரிஹானா கலந்து கொண்டு பாடல் கச்சேரி நடத்தினார். அதேபோல ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் நடந்த மூன்று நாட்கள் திருமணத்திற்கு முந்தைய பார்ட்டியில் புகழ்பெற்ற பாப் பாடகி கேட்டி பெர்ரி கலந்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் பலகோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. இந்த வரிசையில் தற்போது திருமண நிகழ்ச்சியில் பாடல் கச்சேரி நடத்துவதற்காக ஜஸ்டின் பீபர் வரவழைக்கப்பட்டுள்ளார்.

தாய்மாமன் சீர் வரிசை: ஆனந்த் மற்றும் ராதிகா திருமண நிகழ்வுகளை மிக ஆடம்பரமான முறையில் நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை நீதா அம்பானியே தனிப்பட்ட முறையில் கவனித்து வருகிறார். அண்மையில் கூட குஜராத் திருமண பாரம்பரிய நிகழ்ச்சியான மமேரோ என்ற நிகழ்ச்சி திருமணத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது. மமேரோ நிகழ்ச்சி என்றால் மணமகளின் தாய்மாமன் இனிப்புகள் மற்றும் பல்வேறு பரிசு பொருட்கள் அடங்கிய சீர் வரிசையுடன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தரக்கூடிய ஒரு சம்பிரதாய சடங்கு நிகழ்ச்சி ஆகும். இதில் அம்பானியின் மொத்த குடும்பமும் உற்சாகமாக கலந்து கொண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்தது.
மூன்று நாள் நிகழ்ச்சி: மும்பையில் உள்ள ஜியோ சென்டரில் ஜூலை 12ஆம் தேதி திருமணம் , அதனை தொடர்ந்து 13-ஆம் தேதி மணமக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் சடங்கு நிகழ்ச்சி, 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி என தொடர்ந்து மூன்று நாட்களுக்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றது. இந்த மூன்று நாட்களும் இந்தியா மட்டும் இல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு பிரபலங்களும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











