பொன்மகள் வந்தாள்... சூர்யா-ஜோதிகாவுக்காக முதன்முறையாக ஒன்று சேர்ந்த ‘குருசிஷ்யன்கள்’!
ஜோதிகாவின் அடுத்தப்படமான பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை சூர்யா தயாரிக்கிறார்.
சென்னை: ஜோதிகா நடிக்கும் புதிய படமொன்றை அவரது கணவரும், நடிகருமான சூர்யா தயாரிக்கிறார். அப்படத்திற்கு பொன்மகள் வந்தாள் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களாகத் தேர்வு செய்து தயாரித்து வருகிறது. அந்தவகையில் தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது 2டி.

ஜோதிகா கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் இயக்குநர் மற்றும் நடிகர்களான பாக்யராஜ், பார்த்திபன் மற்றும் பாண்டியராஜன் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். பிரதாப் போத்தனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
"பொன்மகள் வந்தாள்" என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் எழுதி இயக்குகிறார். எல்லோராலும் ரசித்துக் கொண்டாடக் கூடிய கதைகளில் ஜோதிகா தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால் இப்படத்தின் கதையையும் மிகச் சிறப்பாக இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக் உருவாக்கி இருக்கிறாராம்.
ராம், பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராம்ஜி இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். 96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தொகுப்பாளராக ரூபனும், ஆர்ட் டைரக்டராக அமரனும் பொறுப்பேற்றுள்ளனர் .
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று காலை தொடங்கியுள்ளது. இதில் நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, இயக்குநர்கள், ஹரி, பிரம்மா, முத்தையா, டி.ஜெ.ஞானவேல், தயாரிப்பாளர்கள் ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், எஸ்.ஆர் பிரபு, எஸ்.ஆர் பிரகாஷ் பாபு விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகியோரும் மற்றும் படத்தின் நட்சத்திரங்கள் ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் படத்தின் இயக்குநர் பெட்ரிக் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











