கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே.. புது புது அர்த்தங்கள்.. இன்றோடு 34 ஆண்டுகள் நிறைவு!
சென்னை: புது புது அர்த்தங்கள் திரைப்படம் வெளியாகி இன்றோடு 34 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. வாழ்க்கை போடும் புதிய புதிரின் அர்த்தத்தை அழகாக சொன்ன இந்த படம் திரையரங்கில் சக்கைப்போடு போட்டது.
கே பாலசந்தர் இயக்கத்தில் 1989ம் ஆண்டு வெளியான திரைப்படம் புது புது அர்த்தங்கள்.
இதில் ரகுமான், சித்தாரா, கீதா, ஜனகராஜ், ஜெயசித்ரா, பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் நடித்திருந்தனர்.

புது புது அர்த்தம்: சிந்து பைரவி, புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி என பல படங்களில் ஒன்றாக பணிபுரிந்த, இயக்குனர் கே.பாலசந்தர், இளையராஜா கூட்டணி புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தில் மீண்டும் இணைந்தனர். மற்ற படங்களைப் போல இந்த படத்திலும், இளையராஜாவின் இசை ரசிகர்களை மெய்மறக்க வைத்தது என்று சொல்லும் அளவிற்கு இன்று அந்த படத்தின் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உணர்ச்சிகரமான கதை: பிரபல பாடகரான பாரதி (ரகுமானை) காதலித்து, திருமணம் செய்து கொள்கிறார் கௌரி (கீதா). அவரின் அதீத அன்பே, பாரதிக்கு பெரும் தொல்லையாக மாற. மனைவியின் தொந்தரவை தாங்க முடியாத பாரதி, வீட்டை விட்டு வெளியேறி வேறொரு இடத்தில் வாழும் ஜோதி என்ற பெண்ணுடன் இணைந்து வாழ்கிறார். கடைசியில் கௌரியை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகிறது. அதனால் ஏற்படும் உணர்ச்சிகரமான உறவை சுற்றியே கதை பின்னப்பட்டு இருந்தது.
34 ஆண்டுகளை நிறைவு: இளையராஜாவின் இசையில், கல்யாணமாலை, குருவாயூரப்பா, எல்லாரும் மாவாட்ட, கேளடி கண்மணி உள்ளிட்ட அனைத்து பாடல்களும், பெரும் வெற்றி பெற்றன. அந்த படத்தில் இடம் பெற்ற கல்யாணமாலை பாடலை இன்றைய காலத்து 2கே கிட்ஸ்களும் காலர் டியூனிலும், வாட்ஸ் அப் ஸ்டேடஸிலும் வைத்து வருகின்றனர். கீதா, ரகுமான், சித்தாரா இவர்கள் மூவருக்கும் இடையில் நடக்கும் மன கொந்தளிப்பை அழகாக சொன்ன இத்திரைப்படம் வெளியாகி இன்றோடு 34 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.


Click it and Unblock the Notifications











