30 ஆண்டுகளுக்குபிறகு மீண்டும் ஜாய்ன் ஆகும் ஜோடி... சூப்பர் காம்பினேஷனா இருக்கே!
சென்னை : நடிகர் பாக்கியராஜ் சிறப்பான திரைக்கதைக்கு சொந்தக்காரர். பல வெற்றிப் படைப்புகளை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளவர். தற்போதுவரை சிறந்த திரைக்கதையை தந்ததில் இவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லாமல் உள்ளது. இவரது காலக்கட்டத்தில் இவரது இயக்கத்தில் வெளியான பல படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இயக்குநர் கே பாக்யராஜ்
நடிகரும் பிரபல இயக்குநருமான கே பாக்கியராஜ் சிறப்பான பல படங்களை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்தவர். இவரது வித்தியாசமான கதையமைப்பு மற்றும் காமெடி கலந்த திரைக்கதையில் வெளியான பல படங்கள் வெற்றியடைந்தன. தொடர்ந்து பல படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் கே பாக்கியராஜ்.

சிறப்பான படங்கள்
இவரது இயக்கத்தில் வெளியான தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, சின்ன வீடு போன்ற படங்கள் இன்றளவும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படங்களாக உள்ளன. இவரது ஊர்வசியுடன் இவர் நடித்திருந்த முந்தானை முடிச்சு படம் சிறப்பான வெற்றி மற்றும் வசூல்மழையை பொழிந்தது.

மீண்டும் முந்தானை முடிச்சு
தற்போது 37 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படம் மீண்டும் எடுக்கப்பட உள்ளது. பாக்கியராஜ் வேடத்தில் சசிக்குமாரும் ஊர்வசி வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர். இயக்குநர் எஸ்ஆர் பிரபாகரன் இந்தப் படத்தை இயக்க உள்ளார். சுந்தரபாண்டியன், கொம்பு வச்ச சிங்கம்டா படங்களை தொடர்ந்து சசிக்குமார் பிரபாகரன் இந்தப் படம் மூலம் மூன்றாவது முறையாக இணைகின்றனர்.

மீண்டும் ராசுக்குட்டி ஜோடி
இதனிடையே, தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு ராசுக்குட்டி ஜோடி மீண்டும் ஒரு படத்தில் நடித்துவருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கே பாக்யராஜ் இயக்கி நடித்திருந்த ராசுக்குட்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யா. இவர்தான் தற்போது மீண்டும் பாக்யராஜூடன் இணைந்துள்ளார்.

துவங்கியது படப்பிடிப்பு
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ் அம்பேத்குமார் இந்த பெயரிடப்படாத புதிய படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தை கணேஷ் கே பாபு இயக்கி வருகிறார். முதலும் நீ முடிவும் நீ படத்தின் ஹரீஷ், வாழ் படத்தின் ஆண்டனி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.

அதிகமான எதிர்பார்ப்பு
ஜென் மார்ட்டின் இசையமைத்துவரும் இந்தப் படத்தில் ரொமான்ஸ், காமெடி தூக்கலாக இருக்கும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்தின் முதல் வாரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு கே பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா இணைந்து நடித்துவருவது படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











