நான் தேர்தலில் நிற்பது செல்வமணிக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது -விளாசிய பாக்யராஜ்
சென்னை : தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது.
தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணி போட்டியிட உள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுக விழாவில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்யராஜ் பங்கேற்றார்.

இயக்குநர்கள் சங்க தேர்தல்
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் கே பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணி போட்டியிட உள்ளது. தலைவர் பதவிக்கு பாக்யராஜ், செயலாளர் பதவிக்கு பார்த்திபன், பொருளாளர் பதவிக்கு வெங்கட் பிரபு என மொத்தம் இந்த அணியின் சார்பில் 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பாக்யராஜ் தலைமையில் போட்டி
இந்த தேர்தலில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கே பாக்யராஜ் பேசினார். அப்போது இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிட அதிக கட்டணம் செலுத்தும் நிலை உள்ளதாகவும் நியாயமான தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

பிரத்யேக யூடியூப் சேனல்
சங்கத்திற்காக பிரத்யேக யூடியூப் சேனல் துவங்கப்படும் என்று கூறிய அவர், திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதற்கு முன்பாக அனைவருக்கும் ஊதியம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார். தற்போது உள்ள இயக்குனர் சங்க நிர்வாகிகளை சந்திப்பதே மிக சவாலாக உள்ளதாகவும் தான் நீண்ட ஆண்டுகளாக ஒரே தொலைபேசி எண்ணை வைத்துள்ளதால், தான் வெற்றி பெற்றால் இயக்குநர்கள் எப்போது வேண்டுமானாலும் தன்னை அழைக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

செல்வமணி ஆண்டு அனுபவித்துவிட்டார்
இந்த தேர்தலில் போட்டியிட்டால் இவ்வளவு நாள் சம்பாதித்த பெயர் போய்விடும் என்று தன்னை பலர் பயமுறுத்தியதாகவும் ஆனால் தனக்கு வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவும் இல்லை, அதனால் தான் பயப்படத் தேவையில்லை என்றும் அவர் நகைச்சுவையாக பேசினார். தொடர்ந்து பேசிய அவர், இதுவரை தலைவராக இருந்த ஆர்கே செல்வமணி எல்லாம் நன்கு சம்பாதித்து, ஆண்டு அனுபவித்து விட்டதாகவும் தெரிவித்தார்.

செல்வமணிக்கு பயம் ஏற்பட்டுள்ளது
தான் தேர்தலில் நிற்பதால் செல்வமணிக்கு அவரை அறியாமல் ஒரு பயம் வந்துள்ளதாகவும் பாக்யராஜ் குறிப்பிட்டார். மேலும் செல்வமணி எடுத்த படங்கள் எல்லாம் நன்றாக ஓடியதாக கூறப்படுவதாகவும், அந்தப் படங்களை அவர்தான் எடுத்தாரா என்ற சந்தேகம் தனக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











