TVK Vijay:எது குடும்ப அரசியல்? விஜய்யை வெளுத்துவிட்ட பாக்யராஜ்.. திரையுலகில் அதிகரிக்கும் எதிர்ப்பு
சென்னை: நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி, முழுக்க முழுக்க அரசியலில் களமிறங்க போவதாக கடந்த ஆண்டு அறிவித்தார். இப்படி இருக்கும்போது, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு கால இடைவெளி மட்டுமே உள்ள நிலையில், திரையுலகில் விஜய்க்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இருவேறு நிலைகள் உருவாகியுள்ளது. இதில் விஜய்க்கு எதிராக ஏற்கனவே நடிகர் மற்றும் இயக்குநர் போஸ் வெங்கட் காட்டமாக விமர்சித்து வரும் நிலையில், திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த ஒரு ஆண்டாக செலக்டிவாக ரியாக்ட் செய்து வரும் விஜய் மீது அரசியல் தளத்தில் பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. இது மட்டும் இல்லாமல், திரைத்துறையில் உள்ளவர்களும் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

விஜய் தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார் என்பதால், எப்போது தமிழ்நாடு முழுவதும் பயணத்தை மேற்கொள்வார்? எப்போது அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிவார் என்ற கேள்வி அவரது ரசிகர்களும் தொண்டர்களும் முன் வைத்து வருகிறார்கள். தவெகவில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் என்ற அளவீட்டில் சில முகங்கள் வெளியே தெரிந்தாலும், கட்சியை கடுமையாக விமர்சிக்கும் போது அது விஜய்யை அட்டாக் செய்வதாகவே இருப்பதால், விஜய்க்கு அரசியல் களம் சவாலானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
கே. பாக்யராஜ்: விஜய், தற்போது ஆட்சியில் உள்ள திமுக குறித்து விமர்சிக்கும் போது, திமுக மீது ஏற்கனவே பல ஆண்டுகளாக கூறிவரும் விமர்சனமான குடும்ப அரசியல் என்ற விமர்சனத்தை முன் வைத்து விமர்சிக்கிறார். இப்படியான நிலையில் நடிகர், இயக்குநர், திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் மேடை ஒன்றில் பேசும்போது விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, அவர் பேசும்போது, எது குடும்ப அரசியல்? எனக்கு திமுக தொண்டர்கள் குறித்து எனக்குத் தெரியும். அவர்கள் எனக்கு ரசிகர்களாக இருந்தார்கள், இப்போதும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு நாளும் எனக்கு தொண்டர்களாக மாறமாட்டார்கள்.

மு.க.ஸ்டாலின்: கலைஞர் 46 வயதில் முதலமைச்சர் ஆனார், ஜெயலலிதா 43 வயதில் முதலமைச்சர் ஆனார். ஃபரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லா முதலமைச்சர் ஆகும்போது அவருக்கு வயது 39 வயதில் முதலமைச்சர் ஆகிவிட்டார். முலாயம் சிங் ஆதவ்வின் மகன் அகிலேஷ் யாதவ் 38 வயதில் முதலமைச்சர் ஆகிவிட்டார். இவர்கள் எல்லாம் மகன்கள் என்ற காரணத்திற்காக முதலமைச்சர் ஆனவர்கள். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 67 வயதில் தான் முதலமைச்சர் ஆனார்.

மிசா: கலைஞர் கருணாநிதி அவரை அருகில் வைத்து அனைத்தையும் பொறுமையாக கற்றுக் கொடுத்தார். இவரும் பொறுமையாக கற்றுக் கொண்டார். தனது இளம் பருவத்தில் இருந்து இந்த இயக்கத்திற்காக சைக்கிளில் ஊர் ஊராகச் சுற்றியவர். திருமணமான போது அவரது திருமண வாழ்க்கையை கூட சந்தோஷமாக வாழ முடியாமல், மிசாவில் சிறை சென்றவர். இவர்களைப் பார்த்து குடும்ப அரசியல் என விமர்சிக்கிறீர்கள். திமுக தொண்டர்கள் உங்களுக்கு ரசிகர்களாக இருப்பார்கள். அவர்களை தொண்டர்களாக மாற்ற முயற்சித்தால் அவர்களும் உங்கள் படத்தை பார்க்க மாட்டார்கள், அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களையும் பார்க்க விடமாட்டார்கள்" என பேசியுள்ளார். பாக்யராஜின் இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜன நாயகன்: விஜய் தற்போது தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவல் கோலிவுட்டில் உலா வருகிறது. ஹெச். வினோத் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கே.வி. என் புரெடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு விஜய் சம்பளம் மட்டும் ரூபாய் 275 கோடிகள் என கூறப்படுகிறது. ஜன நாயகன் படம் அடுத்த ஆண்டு அதாவது 2026ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது என படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

பராசக்தி: படட்த்தை தொடக்கத்தில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் படக்குழு வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால் அதன் பின்னர் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முக்கிய காரணமே, இந்த படத்தில் உள்ள வசனங்கள், காட்சிகள், போன்றவை விஜய்யின் அரசியல் களத்திற்கு உதவும் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரது 25வது படமான பராசக்தி படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஸ்ரீ லீலா, ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்தின் ரிலீஸ் தேதி குறித்த சமீபத்திய அறிவிப்பில், அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற பாடல் வரிகளும் இடம் பெற்றிருந்தது.
பொங்கல்: சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மதராஸி படம் வெளியாகவுள்ளது. இந்த படமும் அரசியல் பேசும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. பராசக்தி படத்தை ஜன நாயகன் படத்திற்கு எதிராக ரிலீஸ் செய்ய காரணமே, இந்த படம் பேசும் அரசியல்தான் என கூறப்படுகிறது. இப்போது படத்தின் டைட்டிலுடன் சேர்க்கப்பட்டுள்ள, அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற சொற்கள் படம் பேசும் அரசியலை மிகத் தெளிவாக காட்டுகிறது.

தியேட்டர்: விஜய்யின் கடைசி படம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்வார்கள் என ரசிகர்கள் எண்ணினர். ஆனால் இப்போது பராசக்தி படமும் ரிலீஸ் ஆவதால், விஜய் படத்திற்கான தியேட்டர்கள் எண்ணிக்கை குறையும். அது வசூலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், படத்தை சோலோ ரிலீஸாக வெளியிட படக்குழு பரீசிலிக்க வேண்டும் என திரைத்துறையினர் தரப்பில் பேசி வருகிறார்களாம். ஆனால் படக்குழு தங்களது முடிவை மாற்றிக் கொள்வார்களா இல்லை, அதே முடிவில் இருப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்நிலையில் திரைத்துறையில் உள்ள போஸ் வெங்கட், கே. பாக்யராஜ் போன்றவர்கள் விஜய்க்கு எதிராக பேசி வருவதால், தேர்தல் நெருங்க நெருங்க இந்த எதிர்ப்பு இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications











