காதல் மொழி சொல்ல வரும்... விழி மூடி யோசித்தால்...!
சென்னை: டுவிஸ்டர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் கீழ் செந்தில் குமார் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் விழி மூடி யோசித்தால்.
அயன் படத்தில் வரும் பிரபல பாடல் வரிகளை தலைப்பாகக் கொண்டு தயாராகி வரும் இப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் பயணம் செய்வதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் மியூசிக் அகாடமியில் பயிற்சி பெற்ற முகமது ஆத்திப் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பாடல்கள்...
படத்தின் பாடல்களை பாடகர்கள் கார்த்திக், சின்மயி, ஸ்வேதா மோகன், ரீட்டா, சக்தி ஸ்ரீகோபாலன் மற்றும் திபக் ஆகியோர்கள் பாடியுள்ளனர்.

பயிற்சி...
படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும், நாயகனுமான செந்தில்குமார் அமெரிக்காவில் இயக்கம் மற்றும் நடிப்பிற்கான பயிற்சி பெற்றவர்.

அமெரிக்க விருதுகள்...
இதுவரை 25க்கும் அதிகமான குறும்படங்களை இயக்கி நடித்துள்ள செந்தில்குமார், 15க்கும் மேற்பட்ட மியூசிக் வீடியோக்களையும் இயக்கியுள்ளார். இரண்டு குறும்படங்களுக்கு அமெரிக்காவில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகர் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்படம்...
அமெரிக்காவில் விருதுகள் வாங்கிய போதும், தனது முதல் முழு நீளத் திரைப்படம் தாய்மொழியான தமிழில் தான் என்ற உறுதியுடன் விழி மூடி யோசித்தால் படத்தை உருவாக்கியுள்ளார்.

ஒளிப்பதிவு...
இப்படத்தின் ஒளிப்பதிவிற்கு என பிரத்யேகமாக விஸ்வரூபம் படத்தில் கமல் பயன்படுத்திய கேமரா பயன்படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











