74வது பிறந்த நாளில் ஜேசுதாஸ்...கொல்லூர் கோவிலில் பாட்டுப் பாடி உருக்கம்!
திருவனந்தபுரம்: மலையாளப் பின்னணிப் பாடகராக அறிமுகமாகி, இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் பிரமிக்கத்தக்க வகையில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, பக்தி, காதல், சோகம், தத்துவம் என்று சகல பாவங்களிலும் அமர்க்களமான ஒரு பாடகராக கோலோச்சி வரும் கே.ஜே.ஜேசுதாஸ் இன்று தனது 74வது பிறந்த நாளை கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோவிலில் கொண்டாடினார்.
குடும்பத்துடன் கொல்லூர் கோவிலுக்கு வந்திருந்த ஜேசுதாஸ் அங்கு மனமுருக பாடல்களைப் பாடி மகிழ்ந்து தனது பிறந்த தினத்தைக் கொண்டாடி அம்மனின் அருள் பெற்றார்.
சாகாவரம் படைத்த பல பாடல்களுக்கு குரல் கொடுத்த ஜேசுதாஸுக்கு திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கொச்சியிலிருந்து கொடி நாட்டிய ஜேசுதாஸ்
கொச்சியின் கோட்டை பகுதியில் பிறந்தவர் ஜேசுதாஸ். ரோமன் கத்தோலிக்கரான இவர் சிறு வயதிலேயே இசைப் புலமையுடன் திகழ்ந்தவர். இவரது தந்தை அகஸ்டின் ஜோசப், மலையாளத் திரையுலகில் அப்போதே பிரபலமாக திகழ்ந்த இசையமைப்பாளர். அவர்தான் ஜேசுதாஸுக்கு முதல் குரு ஆவார்.

செம்மங்குடியின் சிஷ்யன்
திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீஸ்வாதி திருநாள் இசைக் கல்லூரியில் பயின்றபோது இவருக்கு இசைப் பயிற்சி கொடுத்தவர் கர்நாடக இசை ஜாம்பவான் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் ஆவார்.

பணக் கஷ்டத்தால் பாதியில் நின்ற இசைப் பயிற்சி
ஆனால் வீட்டில் வறுமை நிலவியதாலும், போதிய பணம் இல்லாததாலும் தனது பயிற்சியை பாதியில் விட வேண்டியதாயிற்று ஜேசுதாஸுக்கு.

செம்பை வைத்தியநாத பாகவதரிடம் பயிற்சி
இதையடுத்து செம்பை வைத்தியநாத பாகவதரிடம் பயிற்சி பெற்றார் ஜேசுதாஸ்.

இசையில் வெற்றிக் கொடி
1961ம் ஆண்டு முதல் பாடி வருகிறார் ஜேசுதாஸ். இவரது முதல் பாடல் மலையாளத்தில். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கில் பாடியுள்ளார் ஜேசுதாஸ். இவரது குரலுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

கர்நாடக இசைப் பாடல்கள் அபாரம்
இவரது குரலில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள்தான் ஜேசுதாஸுக்கு ஒரு தரத்தைக் கொடுத்தது.

இளையராஜாவின் இசையில்
இசைஞானி இளையராஜாவின் இசையில் இவர் பாடிய பாடல்கள் அத்தனையும் எட்டு திக்கும் ஹிட் ஆனவை. அத்தனையும் என்றும் கேட்க கேட்க லயிக்க வைக்கும் தித்திப்புப் பாடல்கள். விருந்துகள். குறிப்பாக சிந்து பைரவியில் ராஜாவின் இசையி்ல இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார் ஜேசுதாஸ் தனது குரலில்.

கொல்லூர் கோவிலில் 74வது பிறந்த நாள்
ஜேசுதாஸ் இன்று தனது பிறந்த நாளையொட்டி மனைவி, மகன், மருமகள், பேரப் பிள்ளைகளுடன் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று மனமுருகப் பாடி பிரார்த்தனை செய்து வழிபட்டார்.


Click it and Unblock the Notifications











