மம்மூட்டி மோகன்லாலை பாராட்டி ...நயந்தாராவை டோட்டல் டேமேஜ் செய்த தயாரிப்பாளர் கே ராஜன்
சென்னை : தமிழ் திரையுலகம் கேரள திரையுலகத்தைப் பின்பற்ற வேண்டுமென்று கே. ராஜன் 'கிராண்மா 'ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசினார்.
ஜி என் ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ் ஆர்,விநாயகா சுனில் இணைந்து தயாரித்துள்ள படம் 'கிராண்மா'. Grandma - இப்படத்தை ஷி ஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார்.இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
விழாவில் ட்ரெய்லரை வெளியிட்டுத் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,"நான் எது பேசினாலும் ட்ரெண்ட் ஆகிவிடுகிறது.நான் வழக்கமாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது அனைவருக்கும் தெரியும் .நல்லது இருந்தால் வாழ்த்துவேன். ஏதாவது குறை இருந்தால் அதையும் சொல்லி விட்டுச் செல்வேன்.

ஆண்டுக்கு 200 படம்
தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தமிழ்ப்படம் எடுப்பதில் ஆச்சரியம் இல்லை .அப்படி எடுத்து இந்த 30 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானவர்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளார்கள்.இந்த பத்தாண்டுகளாக ஒரு ஐயாயிரம் பேர் நடுத்தெருவுக்கு வந்து இருப்பார்கள். ஆண்டுக்கு 200 படம் தயாரானால் 5 தயாரிப்பாளர்கள் தப்பிப்பதே பெரிய விஷயம்.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்
அதனால்தான் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுங்கள் என்று நான் கத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு தயாரிப்பாளர் நன்றாக இருந்தால் மறுபடியும் படம் தான் எடுப்பான்.படமெடுத்து லாபம் வர வேண்டாம், முதலீடு வந்தால் போதும் அடுத்த படத்தை ஆரம்பித்து விடுவார்கள். அதனை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.இதனால் தொழில் நுட்பக் கலைஞர்கள் நடிகர்கள் நடிகைகள் வாழ்கிறார்கள். துணை நடிகர்கள் வாழ்கிறார்கள்.

விஜய்சேதுபதி மட்டும் விதிவிலக்கு
இங்கே ஹேமந்த் மேனன் என்கிற நடிகர் வந்திருக்கிறார் .அவர் கேரளாவில் கதாநாயகனாக நடித்தவர் .இந்தப் படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார். நம் ஊரில் இப்படி நடக்குமா?கதாநாயகன் ஆகிவிட்டால் வில்லனாக நடிக்க மாட்டார்கள் .விஜய்சேதுபதி மட்டும் விதிவிலக்கு.கதாநாயகன் ஆகிவிட்டால் இங்கே வில்லனாக நடிக்க மாட்டார்கள்.அவர்களால் நாலு தயாரிப்பாளர்கள் கீழே போய் இருப்பார்கள்.ஆனால் அவர்கள் இறங்க மாட்டார்கள்.

கேரளாவில் மம்முட்டி குடித்த டி
தமிழ்ப்படமே எடுக்க வேண்டாம் என்று வெறுத்துப்போய் விட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் , கேரளாவில் இருந்து தமிழ்ப்படம் எடுக்க வந்த உங்களை வணங்கி வரவேற்கிறேன். கேரளாவில் இருப்பவர்கள் தொழிலைத் தெய்வமாக மதிப்பவர்கள். கேரளாவில் மம்முட்டி ,மோகன்லால் என கதாநாயகர்கள் அத்தனை பேரும் சாதாரண தொழிலாளிகளுடன் அமர்ந்து டீ குடிப்பார்கள் . இங்கே அது நடக்குமா? கொஞ்சம் விட்டவுடன் கேரவானில் போய் உட்கார்ந்து கொள்வார்கள். நான் தயாரிப்பாளரிடம் கேட்டேன் இந்த படத்தில் எத்தனை கேரவான் பயன்படுத்தினீர்கள் என்று. அவர் இல்லவே இல்லை,ஒரு மாடி வீட்டில் தான் தங்கி இருந்தோம் என்றார் .

பட்ஜெட்டைத் தாண்டி
இங்கே இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் செலவு செய்தாலும் தயாரிப்பாளர்களுக்கு மரியாதை இல்லை. கதைசொல்லி விவாதம் முடிந்து படப்பிடிப்பு ஆரம்பிக்கும் வரை இயக்குநர் தயாரிப்பாளரை மதிப்பார்.
படப்பிடிப்பு தொடங்கி விட்டால் கேமரா முன் நின்று விட்டால் இயக்குநர் தயாரிப்பாளரை மதிக்க மாட்டார்.
பணம் கொடுத்த தயாரிப்பாளர் ஐந்தாவது இடத்துக்குப் போய் விடுவார்.இயக்குநரும் போட்ட பட்ஜெட்டில் எடுப்பதில்லை. பட்ஜெட்டைத் தாண்டிப்போய்விடுவார். இந்தப்படம் இருபத்தி மூன்று நாட்களில் முடிந்துள்ளதைக் கேள்விப்பட்டதும் இயக்குநரைக் கட்டித் தழுவினேன். மாதக்கணக்கில் விவாதம் செய்து கொள்ளுங்கள் .படப்பிடிப்பு நாட்களை குறித்த நேரத்தில் முடியுங்கள் இதுதான் இயக்குநர்களுக்கு எனது வேண்டுகோள்.

ஐந்து கோடி சம்பளம்
நான் மம்முட்டிக்கு நன்றி சொல்கிறேன்.கேரளாவில் ஒரு டிவியில் நான் திருட்டு விசிடிக்கு எதிராகப்போராடி சிறை சென்றதைப் பற்றி எல்லாம் சொல்லி அதை மலையாளத்திலும் எழுதிக் காட்டுகிறார்கள். நான் தயாரித்த படங்களை எல்லாம் குறிப்பிடுகிறார்கள். அங்கே மம்முட்டி இது பற்றிச் சொல்கிறார்.இங்கே ஒருவனும் சொல்ல மாட்டான்.இங்கே மேடையில் நிறைய கதாநாயகிகள் இருக்கிறார்கள். சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா இந்த விழாவிற்கு வந்திருக்கிறார்கள். எங்கள் தமிழ்ப் படத்தில் அந்தப் படத்தில் நடித்த கதாநாயகிகள் ஆடியோ விழாவுக்கு வர மாட்டார்கள். இன்றைக்கு நம்பர் ஒன்னாக இருக்கும் ஒரு கதாநாயகியிடம், ஏன் நீங்கள் உங்கள் படம் சம்பந்தப்பட்ட விழாவுக்குச் செல்வதில்லை என்று கேட்கிறபோது நான் போய் இந்த படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி அந்தப் படம் ஓடாமல் தோல்வி அடைந்துவிட்டால் எனக்கு கெட்ட பெயர் வந்து விடுமே என்று சொல்கிறார். ஐந்து கோடி சம்பளம் வாங்கும் போது இது ஓடாத படம் என்று தெரியாதா?.ஆனால் அவர் தயாரித்த நெற்றிக்கண் சொந்தப் படத்திற்கு மட்டும் புரமோஷனுக்கு செல்கிறார். இது கேவலமாக இல்லையா? என்று மிகவும் கோபமாக கொதித்து பேசி உள்ளார் .


Click it and Unblock the Notifications











