பிரகாஷ்ராஜ் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. இல்லையென்றால்.. : கே.ராஜன் காட்டம்
நடிகர் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் அவரை தமிழ் படங்களில் நடிக்க விடமாட்டோம் என தயாரிப்பாளர் கே.ராஜன் எச்சரித்துள்ளார்.
சென்னை: தமிழர்களுக்கு எதிராக பேசிய விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் அவரை தமிழ் படங்களில் நடிக்க விடமாட்டோம் என தயாரிப்பாளர் கே.ராஜன் எச்சரித்துள்ளார்.
தமிழில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், தற்போது அரசியலிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இவர் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அதோடு, ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்காகவும் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், டெல்லியில் ஆம்ஆத்மிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்ற பிரகாஷ் ராஜ், டெல்லி அமைச்சர் கோபால் ராய்யுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 'நான் தமிழன் அல்ல, கன்னடக்காரன் என்றும் தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிபோவது உண்மைதான்' எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அறிக்கை:
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழக தலைவரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘கர்நாடகத்தில் பிறந்த பிரகாஷ்ராஜை கன்னட திரையுலகம் கைவிட்டபோது, தமிழகத்தில் வாய்ப்பு தேடினார்.

வில்லன் வாய்ப்பு:
அப்போது பாலசந்தர் என்ற தமிழர் தான் அவருக்கு நடிக்க வாய்ப்பு அளித்தார். அதன்பிறகு 100-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்து பொருளும், புகழும் சேர்த்தார். இவரால் பல தமிழ் இளைஞர்களுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு தமிழ் படங்களில் பறிபோனது.

நன்றி மறந்த பிரகாஷ்ராஜ்:
தமிழகத்தில் வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் ஓட்டல், கட்டிட வேலைகள் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். தாய் தமிழகத்திலேயே பல லட்சம் தமிழ் இளைஞர்களுக்கு வேலை இல்லை. உண்மை நிலை இப்படி இருக்க பிரகாஷ்ராஜ் நன்றி மறந்து பேசி இருப்பது கண்டனத்துக்குரியது.

மன்னிப்பு கேட்க வேண்டும்:
இதற்காக தமிழர்களிடம் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லை என்றால் புதிதாக எடுக்கப்படும் தமிழ் படங்களில் பிரகாஷ்ராஜை நடிக்க விடமாட்டோம். அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











