தயாரிப்பாளர் ஜீவிக்கு… கடைசி நேரத்தில் ரஜினி, மணிரத்னம் உதவவில்லை.. கேடி.குஞ்சுமோன் வருத்தம் !
சென்னை : தயாரிப்பாளர் ஜீவி நஷ்டமடைந்து மன அழுத்தத்தில் இருந்த போது மணிரத்னமோ, ரஜினியோ யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை என கேடி.குஞ்சுமோன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் ராபின்சன் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில், விஜய் டிவி அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடித்துள்ள காதல் காமெடி திரைப்படம் கடலை போட பொண்ணு வேணும்.
ஒரு இரவில் நடக்கும் கதையில், காமெடி நிறைந்த கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செனனையில் நேற்று நடைப்பெற்றது. இதில், தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பேசியதாவது.

கேடி.குஞ்சுமோன்
திரைப்பட விழாக்களை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. மீண்டும் விழாக்கள் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தை பார்த்தேன் படம் அருமையாக வந்துள்ளது, பாடல்கள் ரசிக்கும் படி இருக்கின்றன. தயாரிப்பாளர் படத்திற்காக நிறைய செலவு செய்துள்ளார். திரையில் படத்தைப் பார்த்து ரசியுங்கள் என்று பேசினார். தொடர்ந்து பேசிய கே டி குஞ்சுமோன், ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் நிறைய படங்களை நான் விநியோகம் செய்திருக்கிறேன். கேரளாவில் பல படங்களை தயாரித்து இருக்கிறேன், ஒரு படம் எப்படி வியாபாரம் ஆகும் என்ற நுணுக்கம் எனக்கு நன்றாகத் தெரியும் என்றார்.

நாயகன் படம் லாபமில்லை
கமல்ஹாசன் இயக்கிய நாயகன் படத்தை முதலில் நான் விநியோகம் செய்ய மாட்டேன் என சொன்னேன். ஏன் என்றால், விநியோகஸ்தருக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் பணம் வராது என்பதால், நான் அந்த படத்தை பண்ண மாட்டேன் என்றேன். ஆனால், மணிரத்னத்தின் அண்ணன் ஜீ.வி அந்த படத்தை பண்ண வேண்டும் என எண்ணிடம் வேண்டி கேட்டுக்கொண்டார். ஜீவி எனக்கு காட் பாஃதர் போன்றவர் என்பதால் அவருக்காக நாயகன் படத்தை பண்ணினேன். நாயகன் படம் எனக்கு லாபத்தை பெற்றுத்தரவில்லை.

ஜீவி தற்கொலை செய்து கொண்டார்
இந்த நேரத்தில் எனக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயத்தை நான் சொல்லியே ஆக வேண்டும். இயக்குநர் மணிரத்னத்தின் உடன் பிறந்த அண்ணன், தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஷ்வரன் திரைப்படத் தயாரிப்புத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு பலரிடமும் கடன் வாங்கி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். என்னுடைய நெருங்கிய நண்பர் என்பதால், பல முறை என்னிடம் மனம் நொந்து பேசுவார். துப்பாக்கியை கொடு நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறுவார். நான் பல முறை அவரை சமாதானப்படுத்தி இருக்கிறேன். திடீரென ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டார். அந்த அதிர்ச்சியிலிருந்து நீண்டநாள் என்னால் விடுபடமுடியவில்லை என்றார்.

யாரும் உதவவில்லை
ஜீவி நஷ்டமடைந்து மன அழுத்தத்தில் இருந்த போது மணிரத்னமோ, ரஜினியோ யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இந்த நிலை தான் இங்கு நிலவுகிறது. தயாரிப்பாளர் இல்லை என்றால் சினிமா இல்லை. இயக்குநர்கள், நடிகர்கள் இல்லை, தமிழ் மக்கள் தான் என்னை வாழவைத்தார்கள். எனக்கு கமர்ஷியல் படங்கள் தான் பிடிக்கும் இந்த படத்தில் நல்ல கமர்ஷியல் அம்சங்கள் இருக்கிறது இந்தப் படம் ஜெயிக்க வாழ்த்துக்கள் என்றார் கே டி குஞ்சுமோன்.


Click it and Unblock the Notifications











