மொட்டை போட்டு.. நாக்கில் அலகு குத்தி.. நேர்த்திக்கடனை நிறைவேற்றிய நடிகை!
சென்னை: தீவிர முருக பக்தரான நடிகை சரண்யா, வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு திருத்தணி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்தி, அலகு குத்தி உள்ளார். மொட்டை அடித்தபோது எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ள சரண்யா, தன் வேண்டுதல் நிறைவேறியதால் திருத்தணி முருகனுக்கு மொட்டை அடித்துள்ளதாக கூறி உள்ளார்.
தமிழில் கடந்த 2004ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் திரைப்படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்தவர் தான் சரண்யா நாக். இவர் 1998ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்த சரண்யா காதல் திரைப்படத்தில் நடித்தன் மூலம் அனைவரும் தெரிந்த முகமாக மாறினார்.

காதல் சரண்யா: அந்த திரைப்படத்தை தொடர்ந்து, துள்ளுற வயசு என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் தோல்வித்திரைப்படமாக அடைந்தது. அதன் பின், ஒரு வார்த்தை பேசு என்ற படத்தில் கதாநாயகியாக கமிட் ஆனார். ஆனால், அந்த படம் பாதியிலேயே நின்றுவிட்டதால், படவாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த சரண்யா தெலுங்கு பக்கம் சென்று, 10th கிளாஸ் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை.
படவாய்ப்பு இல்லை: இதையடுத்து, 2009ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக சரண்யா நடித்திருந்தார். அந்த படத்தில் சரண்யாவின் சதாபாத்திரம் பேசும் படியாக இருந்த போதும் பட வாய்ப்பு வரவில்லை. இவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு ஈர வெயில் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. இந்த நேரத்தில் இவரின் உடல் எடை அதிகரித்துவிட்டதால், நடிப்பை விட்டு விலகி இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் லாபம் படத்தில் பணியாற்றியிருந்தார்.

நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்: தற்போது நண்பர்களின் உதவியுடன் வடபழனியில் எடிட்டிங் ஸ்டூடியோ வைத்து இருக்கும் இவர், தொழில் நன்றாக வளர்ந்தால், முடிக்காணிக்கை செலுத்துவதாக திருத்தணி முருகனிடம் வேண்டுதல் வைத்திருந்தார். தற்போது அந்த வேண்டுதல் நிறைவேறி உள்ளதால், அந்த வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு திருத்தணி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்தி உள்ளார். மேலும், மொட்டை தலையுடன் திருத்தணி முருகருக்கு பூஜை செய்து, நாக்கில் அலகு குத்தி மனம் உருகி நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். மொட்டை தலையுடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே.. அவன் என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே என பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை பார்த்த அவரது ரசிகர்கள் மெய்சிலிர்க்க வைக்கும். உங்கள் முருக பக்தியை வணங்குகிறோம். நல்லதே நடக்கும் என பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











