போர்க்களமாக தமிழகம்.... தள்ளிப் போகுது காலா ரிலீஸ்?
Recommended Video

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு செய்துள்ள துரோகம் ஒரு பக்கம், ஸ்டெர்லைட் ஆலையால் செத்துக் கொண்டிருக்கும் தூத்துக்குடி மக்களின் பிரச்சினை இன்னொரு பக்கம்... தவிர, நியூட்ரினோ, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன், டெல்டா மாவட்டங்களைச் சுடுகாடாக்கப்போகும் மீத்தேன் திட்டங்கள்....
இப்படி தமிழகம் மக்களை நிம்மதியற்ற சூழலுக்குத் தள்ளியிருக்கிறது மத்திய அரசு. இந்தத் திட்டங்கள் அனைத்துமே தமிழர்கள் மீது திணிக்கப்பட்டவை என்பதை உணர்ந்து அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இன்னொரு பக்கம் மாணவர்களும் மக்களும் தன்னெழுச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
எங்கு திரும்பினாலும் மறியல்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் என தமிழகமே போர்க்களமாகியுள்ளது.
சினிமா துறையிலும் நிலைமை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அங்கும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஸ்ட்ரைக் நடந்து வருகிறது.
இந்த ஸ்ட்ரைக் முடிந்ததும் வெளியாகும் முதல் படமே ரஜினிகாந்தின் காலாவாகத்தான் இருக்க வேண்டும் என திரையரங்குகள் விரும்புகின்றன. அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தன.
ஆனால் தமிழகம் உள்ள கொந்தளிப்பான சூழல், திரையுலகில் இன்னும் இணக்கமான போக்கு உருவாகாதது காரணமாக காலா படத்தை திட்டமிட்டபடி ஏப்ரல் மாதம் ரிலீஸ் பண்ணுவார்களா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழகம் இப்போதுள்ள சூழலில் காலா படத்தை வெளியிட விரும்பவில்லை... வேறு தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என்ற அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











