Kausalya: சினிமாவை விட்டு விலக காரணம் இதுதான்… கௌசல்யா மனம் திறந்த பேட்டி!
சென்னை: நடிகை கௌசல்யா சினிமாவை விட்டு விலகியதற்கான காரணம் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து கூறியுள்ளார்.
அழகான க்யூட் நடிகையாக 90களில் தமிழ்சினிமாவில் என்ட்ரி கொடுத்த கௌசல்யா, காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் வெற்றியால் கோலிவுட்டில் மிகவும் பிரபலமானார்.

இதையடுத்து விஜய், சூர்யா, பிரபுதேவா, கார்த்திக், பிரபு என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
காலமெல்லாம் காதல் வாழ்க: நடிகை கௌசல்யா என்றதும் நினைவிற்கு வருவது பல சூப்பர் ஹிட் பாடல்கள் தான். அவரின் முதல் படமான காலமெல்லாம் காதல் வாழ்க படத்தில் வரும் ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம் பாடலை இன்றைய இளசுகளும் ப்ளே லிஸ்டில் வைத்துள்ளனர். பல வெற்றிப்படங்களை கொடுத்த கௌசல்யா சந்தோஷ் சுப்பிரமணியன் படத்திற்கு பிறகு சினிமாவில் தலைகாட்டவே இல்லை.

கௌசல்யா பேட்டி: இந்நிலையில், நடிகை கௌசல்யா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர் பல விஷயங்கள் குறித்து பேசி உள்ளார். இப்போதும், என்னுடைய திருமணம் பற்றி செய்தி இணையத்தில் வருவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏன் என்றால் மக்கள் இன்னும் என்னை மறக்கவில்லை. ஏதாவது ஒரு விஷயத்தில் என்னைப் பற்றி பேசுவது நல்லது தான்.
பிரேக் அப்: நான் திருமணத்தை எதிர்ப்பவள் இல்லை, திருமணம் என்பது ஒரு அழகான விஷயம். எனக்கும் என் கருத்துக்கும் பிடித்தமான ஒருவர் எனக்கு கிடைக்கவில்லை. அப்படி ஒருவர் என் வாழ்க்கையில் இருந்தார். ஆனால் அது பிரேக் அப் ஆகிவிட்டது. இப்போது நான் என் பெற்றோருடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

சினிமாவை விட்டு விலகினேன்: நான் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போது, எனக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டது. இதற்காக நிறைய மாத்திரைகளை சாப்பிட்டதால், திடீரென உடல் எடை கன்னாபின்னா என்று ஏறிவிட்டது. இந்த காரணத்தால் தான் நான் சினிமாவை விட்டு விலகினேன். இப்போது அந்த பிரச்சனை சரியாகி மீண்டும் பழைய கௌசல்யாவாக வந்து இருக்கிறேன்.
விஜய் தான் க்ரஷ்: மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது இதற்கான சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். விஜய் தான் என்னுடைய க்ரஷ், அவருடன் சேர்ந்து நடித்த பிரியமுடன் திரைப்படத்தை என்னைக்குமே மறக்க மாட்டேன். அந்த படம் தான் எனக்குமிகவும் பிடித்த படம் என்று கௌசல்யா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications