‘காற்றின் மொழி’ பார்த்தும் கஜா புயல் நிவாரண நிதி வழங்கலாம்.. எப்படித் தெரியுமா?
கஜா புயல் நிவாரண நிதி திரட்டும் பணியில் இறங்கியுள்ளது காற்றின் மொழி படக்குழு.
சென்னை: கஜா புயல் நிவாரண நிதிக்கு வித்தியாசமாக நிதி திரட்டும் முயற்சியைத் தொடங்கியுள்ளது காற்றின் மொழி படக்குழு.
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் காற்றின் மொழி. கடந்த வாரம் ரிலீசான இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. துமாரி சுலு படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தில் ரேடியோ ஜாக்கியாக நடித்துள்ளார் ஜோதிகா.

இந்நிலையில், இப்படக்குழு வித்தியாசமான முறையில் கஜா புயல் நிவாரண நிதி திரட்ட முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், 'காற்றின் மொழி திரைப்படத்தை ஒரு சிறந்த குடும்பப்படமாக கொண்டாடி வரும் தமிழக மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. இந்த சமயத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக டெல்டா பகுதி மக்களுக்கு நீங்கள் காற்றின் மொழி படம் பார்ப்பதன் மூலமும் உதவலாம்.
இன்று முதல் தமிழகமெங்கும் விற்பனையாகும் ஒவ்வொரு காற்றின் மொழி டிக்கெட் வருமானத்தின் தயாரிப்பாளர் ஷேரிலிருந்து ரூ. 2 தமிழக அரசின் கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும். நம்மால் முடிந்த அளவு நாம் எல்லோரும் நிவாரண நிதி அளித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











