நீங்க யாரையாவது பழி வாங்கனும்னு நினைச்சா இந்தப் படத்துக்குக் கூட்டிட்டுப் போங்க!
சென்னை: நீங்க யாரையாவது பழி வாங்கணும்னு நினைச்சா கண்டிப்பா அவங்கள இந்தப் படத்துக்கு கூட்டிட்டு போகலாம், நீண்ட நாள் கழித்து விமல் நடிப்பில் வெளிவந்திருக்கும் காவல் படத்தைப் பற்றித் தான் சொல்கிறேன்.
தயவுசெய்து இந்தப் படத்துக்கு மட்டும் போய்டாதீங்க, அப்படி என்ன கதைன்னு கேட்கறீங்களா மனசத் தேத்திட்டு மேல படிங்க கதையச் சொல்றேன்.
சென்னையில் உள்ள மிகப் பெரிய ரவுடி ஒருவரை காவல்துறை போட்டுத் தள்ள திட்டமிடுகிறது. வழக்கம் போல காவல் துறையில் உள்ளவர்களில் சிலர் அதற்கு தடை செய்ய, தடைகளைத் தாண்டி அந்த ரவுடியை காவல்துறையினர் கொன்றனரா இல்லையா இதுதான் கதை.
பல சினிமாக்களில் பார்த்துப் பார்த்து சலித்த இந்தக் காட்சிகளை மீண்டும் பத்தாயிரத்து ஒன்றாவது தடவையாக இந்தப் படத்திலும் பார்க்க வேண்டியிருக்கிறது.

விமல் ஹீரோவா என்ன
விமல் தான் இந்தப் படத்தின் ஹீரோ என்றால் நம்பும்படியாக இல்லை. போலீஸ்காரர் மகன் என்ற பாத்திரத்தில், ஊரைச் சுற்றுவது நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது, இடையிடையே நாயகியைக் காதலிப்பது, போன்றவற்றுடன் இரண்டு பாட்டுக்கு ஆடும் வேலையையும் செய்து தான் ஹீரோ தான் என்பதை ஊருக்கு உரக்கச் சொல்லியிருக்கிறார். களவாணி, வாகை சூடவா படங்களில் நடித்த விமலா இது?

சமுத்திரக்கனி
படத்தின் உண்மையான ஹீரோ சமுத்திரக்கனி தான், படம் மொத்தத்தையும் தனது இரண்டு தோள்களில் தூக்கி சுமந்திருக்கிறார். படத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வந்து படம் முழுவதும் பார்க்க மன தைரியத்துடன் அமர்ந்திருக்கும் ரசிகர்களை காப்பாற்றுகிறார்.

நமோ நாராயணன்
நாடோடிகள் படத்தில் அரசியல்வாதியாக வந்து லந்து பண்ணிய நமோ, இந்தப் படத்தில் காவல் நிலையத்தின் எதிராக சட்ட உதவி மையம் வைத்து நடத்துபவராக வருகிறார். மக்கள் இடைத்தரகர்களை எப்படி நம்புகிறார்கள் என்று காட்சிப்படுத்தி இருப்பவர்கள், நமோவை வைத்து சில இடங்களில் சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள்.

புன்னகைப்பூ பூ கீதா
ஆங்! படத்தின் நாயகியாக நடித்திருக்கிறார் புன்னகைப்பூ கீதா , ஒரு சில காட்சி மற்றும் இரண்டு பாடல்களில் மட்டும் வந்து போகிறார். படத்தில் நாயகனுக்கே வேலை இல்லை எனும்போது கீதாவிடம் நாம் வேறு எதையும் பெரிதாக எதிர்பார்க்கக் கூடாது.

ஒளிப்பதிவு மற்றும் இசை
இசை ஜீவி பிரகாஷ் என்றால் நம்ப முடியவில்லை, ஒரு சில பாடல்கள் மட்டுமே ஞாபகத்தில் இருக்கின்றன. ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் கச்சிதமாக ஒளிப்பதிவை செய்திருக்கிறார்.

இயக்குநர் நாகேந்திரன்
சென்னையில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்துப் படமாக எடுத்திருக்கிறோம் என்று சொன்ன இயக்குநர், திரைக்கதையில் இந்த அளவு சொதப்பியது ஏன் என்று தெரியவில்லை. வில்லன் ஒரு கத்தியை கையில் எடுத்து இது விளங்காது நாலு சம்பவத்துக்கு போயும் ஒண்ணும் நடக்கல என்று கத்தியைத் தூக்கிப் போடுவது , காவல் நிலையத்தில் காதலர்கள் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் போன்ற ஒரு சில காட்சிகள் மட்டுமே புதுசு மற்றவை எல்லாமே அரதப் பழசு.


Click it and Unblock the Notifications











