25 ஆவது நாளில் ரஜினியின் கபாலி... வார இறுதியில் 'ஹவுஸ்ஃபுல்' ஆச்சர்யம்!
கபாலி படம் வெளியாகி இன்றோடு 25 நாட்கள் ஆகிவிட்டது. இன்னமும் பல தியேட்டர்களில் இந்தப் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பது பாக்ஸ் ஆபீஸையே அதிசயிக்க வைத்துள்ளது.
கலைப்புலி தாணு தயாரிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் அதிரடி ஆச்சர்ய வசூலுடன் ஆரம்பமானது கபாலி ரிலீஸ். 5000 அரங்குகளுக்கு மேல் வெளியாகி முதல் நாளே நூறு கோடிக்கும் அதிகமாக வசூலித்து பிரமிக்க வைத்த கபாலி.

முதல் இரண்டு வாரங்கள் திரையிட்ட அனைத்து அரங்குகளிலுமே ஹவுஸ் ஃபுல்லாக ஓடியது. வெளிநாடுகளிலும் இதே நிலைதான்.
பொதுவாக வெளிநாடுகளில் தமிழ்ப் படங்கள் அதிகபட்சம் ஒரு வாரம் ஓடினாலே பெரிய விஷயம். ஆனால் கபாலி ரெகுலர் ஷோக்களாக நான்கு வாரங்களாக ஓடிக் கொண்டுள்ளது.
சென்னையில் கபாலி வரலாற்றுச் சாதனைப் படைத்துவிட்டது என்றால் மிகையல்ல. கிட்டத்தட்ட அனைவருமே கபாலி பார்த்துவிட்டார்கள் எனும் அளவுக்கு சென்னை திரையரங்குகளில் இன்னும் நல்ல வசூல். குறிப்பாக வார இறுதி நாட்களில் அத்தனை அரங்குகளிலும் 90 சதவீத கூட்டம் குவிகிறது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை மீண்டும் கபாலி காட்சிகளை அதிகரித்தன மல்டிப்ளெக்ஸ்கள்.
இன்று படத்தின் 25வது நாள். இந்த 25 நாளும் கபாலிக்கு நெருக்கடி தரும் அளவுக்கு பெரிய படம் என்று எதுவும் வெளியாகவில்லை. வெளியான படங்களும் சொல்லிக் கொள்ளும்படி இல்லாததால், இரண்டாவது மூன்றாவது முறை என ரிப்பீட்டட் ஆடியன்ஸ் கபாலிக்கு வருகின்றனர்.
கபாலி வெளியான உலகின் அனைத்து சென்டர்களிலும் 25 வது நாளை ஸ்டெடியாகக் கடந்திருப்பது பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
ரொம்ப நாளைக்குப் பிறகு உண்மையான 100 வது நாள் காணப்போகும் படம் என கபாலியைச் சொல்லலாம்!


Click it and Unblock the Notifications











