கபாலி - அவசரமல்ல, நிதானம்!
ரஜினி திரைவாழ்வில் ‘கபாலி' ஒரு திருப்புமுனை படம். பல விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தன.
அவை:
அ. இன்னும் தம்மை இளமையான ஹீரோ என்ற பிம்பத்துக்குள் அடக்கிக் கொள்ளாமல், முதியவர் பாத்திரத்தை ஏற்றிருப்பது பல தமிழ் ஹீரோக்கள் செய்யத் தயங்குவது. ரஜினி செய்திருக்கிறார். மேலும் சிறையில் பல ஆண்டுகள் கழித்தவர் என்ற நிலையில், தம் பாத்திரத்துக்குத் தேவைப்படும் பக்குவத்தை, நிதானத்தை, சிந்திக்கக்கூடிய தன்மையை திரையில் வெளிப்படுத்தியிருப்பது புதுமை.

ஆ. இளம் ஹீரோயின்களுடன் நடனமாடாமல் (ஃப்ளாஷ்பேக்கிலும்) கண்ணியமாக கண்களாலேயே தம் அரவணைப்பை, காதலை, பாசத்தை, எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் இடங்கள், தமிழ் ஹீரோக்கள் செய்யத் தவறியது. ரஜினி செய்திருக்கிறார். கவர்கிறார்.
இ. பரபர, சுறுசுறு ஹீரோவாகவே கட்டமைக்கப்பட்ட ரஜினி பாத்திரங்கள்தான் இதுவரை நாம் பார்த்தது. அவர் சிந்திப்பார், திட்டமிடுவார், செயல்படுத்துவார் என்பதெல்லாம் புதுசு.
ஈ. அடுக்கடுக்காக சம்பவங்கள், திருப்பங்கள், பஞ்ச் வசனங்கள் என்றே பழக்கப்பட்டுவிட்ட நிலையில், அவை இல்லாமல் நிதானமாக பூ மலர்கிற மாதிரி கதை இதழ் விரிகிறது. இலக்கியத்தில் காவியத் தனிமை என்று ஒன்று உண்டு. மிக மிக உயரத்தில் இருக்கும் முக்கிய பாத்திரங்கள் தங்கள் வேதனையை, தேவைகளை வெளிப்படுத்த முடியாமல், தமக்குள் மருகும் நிலைமை உண்டு. அத்தகைய தனிமையை ரஜினியின் ‘கபாலி' பாத்திரம் கொண்டிருக்கிறது.
இதெல்லாம் வழக்கமாக ரஜினி ரசிகர்கள் பார்க்க விரும்பும் தோற்றங்கள் அல்ல. அவரைப் பற்றி இதுநாள் வரை கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பங்களில் இருந்து ஓரளவேனும் விலகியுள்ள ஒரு பாத்திரம் கபாலி. அதனால்தான், ரசிகர்களால் முழுத் திருப்தியைப் பெற முடியவில்லையோ என்னவோ? ஆனால், அது ரஜினி குறையல்ல.
ஆரம்ப பரபரப்பு, விமர்சனங்கள் எல்லாம் ஓய்ந்த பின்னர், நிதானமாக இந்தப் படத்தை மீண்டும் பாருங்கள். கபாலி நிச்சயம் பிடிக்கும்.
-வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன்
பத்திரிகையாளர்


Click it and Unblock the Notifications











