கபாலி சாதிப் படமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கான படம்...! - பா ரஞ்சித்
சென்னை: கபாலி குறிப்பிட்ட சாதியத்தைச் சொல்லும் படமல்ல. ஒட்டு மொத்தத் தமிழர்களுக்குமான படம். இதுபோன்ற படங்களை நான் தொடர்ந்து எடுப்பேன், என்கிறார் இயக்குநர் பா ரஞ்சித்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ப்ளாக்பஸ்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ 400 கோடி வரை வசூலித்துள்ளது.

இந்நிலையில் கபாலி படக்குழு செய்தியாளர்களை நேற்று சந்தித்தது. அப்போது இயக்குநர் பா. ரஞ்சித் கூறுகையில், "கபாலியில் எந்த சாதி அடையாளத்தையும் நான் வைக்கவில்லை. இந்தப் படம், கதை ஒடுக்கப்பட்ட மக்களின் பின்னணியில் அமைக்கப்பட்டது. அதில் எல்லா சாதிக்காரர்களுமே இருக்கிறார்கள். அதனால்தான் இதை ஒட்டுமொத்த தமிழர்களுக்கான படம் என்கிறேன்.
இந்தக் கதையை ரஜினி சார், தாணு சார் இருவருமே கேட்டு, முழுவதுமாக உணர்ந்து சம்மதித்தார்கள்.
தலித் மக்களின் குரலை வெளிப்படுத்தும் இயக்குநராக மட்டும் நான் இருக்கவில்லை. சாதி வேறுபாடுகள், அதனால் மக்கள் படும் துயரங்கள் குறித்து என் படங்களில் வெளிப்படுத்தியுள்ளேன். ஏனெனில் நான் அவற்றால் பாதிக்கப்பட்டவன். இல்லாவிட்டாலும் சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை என் படத்தில் தொடர்ந்து சொல்பவனாக இருப்பேன். தலித் மக்களுக்கு மட்டுமில்லாமல் எல்லாத் தமிழர்களுக்கும் நான் முன்னுதாரணமாக இருக்கவேண்டும்.
அப்படி ஒரு பெரும் பொறுப்பு எனக்கு உள்ளது. அதை உணர்ந்து செயல்படுவேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











