கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைவு... பிரதமர், ஜனாதிபதி, முதல்வர் இரங்கல்
சென்னை : புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் இன்று காலமானார்.
நடிகர் கமல்ஹாசன் இயக்கிய விஸ்வரூபம் படத்தில் வரும் பாடலில் கதக் நடனத்தை இவர் இயக்கியிருந்தார்.
இந்நிலையில் பிர்ஜு மகாராஜின் மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி மற்றும் தமிழக முதலமைச்சர் உள்ளிட்டோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

பிரபல கதக் நடனக்கலைஞர்
பிரபலமான கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் இன்றைய தினம் மாரடைப்பால் தனது 83வது வயதில் காலமானார். இந்திய அளவில் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களில் இவரது பங்களிப்பு சிறப்பாக அமைந்திருந்தது.

மாரடைப்பால் மறைவு
இன்று காலை தனது பேரக்குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது பிர்ஜு மகாராஜ்க்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மாரடைப்பால் காலமானதாக மருத்துவர்கள் அறிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் இரங்கல்
உலக நாயகன் கமல்ஹாசனின் அபிமானத்தை பெற்றவர் இவர். பிர்ஜு மகாராஜின் மறைவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள கமல்ஹாசன், ஒரு ஏகலைவனை போல அவரை தொலைவிலிருந்து பல்லாண்டுகள் தான் அவதானித்ததாக தெரிவித்துள்ளார்.

இசைக்கு ஆயுளை அர்ப்பணித்தவர்
மேலும் விஸ்வரூபம் படத்திற்காக அருகிலிருந்தும் அவரிடம் இருந்து தான் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். இசைக்கும் நாட்டியத்திற்கும் அவர் தனது ஆயுளை அர்ப்பணித்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விஸ்வரூபம் படத்திற்காக தேசிய விருது
பிர்ஜு மகாராஜ் ஏராளமான குறிப்பாக கமலின் விஸ்வரூபம், தில் தோ பாகல் ஹை, பாஜிரோ மஸ்தானி உள்ளிட்ட படங்களில் இவர் அமைத்த நடனங்கள் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. இதில் விஸ்வரூபம் படத்தின் உன்னை காணாது பாடலுக்காக தேசிய விருதை இவர் வென்றுள்ளார்.

பிரதமர், ஜனாதிபதி, முதல்வர் இரங்கல்
இந்நிலையில் பிர்ஜு மகாராஜின் மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதேபோல பாலிவுட்டின் சஞ்சய் லீலா பன்சாலி, மாதுரி தீக்ஷித் மற்றும் ஆலியா பட் உள்ளிட்டவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











