Devayani: இயக்குநர் அவதாரம் எடுத்த தேவயானி.. சர்வதேச விருதினை வென்று அசத்தல்.. குவியும் பாராட்டு!
சென்னை: நடிகை தேவயானி தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி 2000 வரை முன்னணி கதாநாயகியாக இருந்தார். கமல், சரத்குமார், விஜய்காந்த், அஜித், விஜய், விக்ரம், பிரசாந்த் என பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சினிமாவில் தனக்கான வாய்ப்புகள் குறையத் தொடங்குகின்றது எனத் தெரிந்ததும், சின்னத்திரை சீரியலில் கால் பதித்து, அதிலும் வெற்றி கண்டார். இப்படியான நிலையில் இவர், தானே, எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சிறுவர்களுக்கான குறும்படமான, " கைக்குட்டை ராணி" படத்திற்கு சிறந்த படத்திற்கான சர்வதேச விருது கிடைத்துள்ளது.

நடிகை தேவயானி, வங்காளச் சினிமாவில் இருந்து தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாக்களில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில் ஒருவர். இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார். இணையம் மக்கள் மத்தியில் பரவலாக வந்து சேரத காலத்திலேயே தனது படங்கள் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றவர். அழுத்தம் நிறைந்த கதாபாத்திரங்கள் தொடங்கி குறும்புக்கார பெண் கதாபாத்திரங்கள் வரை சிறப்பாக கையாளத் தெரிந்த நடிகைகளில் ஒருவர் தேவயானி. நகைச்சுவைக் காட்சிகள் தொடங்கி, சீரியஸான காட்சிகள், பாடல்களில் அட்டகாசமாக நடனமாடுவது என ஆல் ஏரியாவிலும் தேவயானி கலக்கி வந்தார்.

திருமணம்: இவர் இயக்குநர் ராஜகுமாரைக் காதலித்தார். இவர்களது காதல் குறித்து பெற்றோர்களிடம் பேச, பெற்றோர்களோ, சம்மதம் தெரிவிக்கவில்லை. எவ்வளவோ போராடியும் வீட்டில் சம்மதம் கிடைக்காததால், இருவரும் நண்பர்கள் முன்னிலையில் திருத்தணியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

சினிமா: காதல் கோட்டை மற்றும் சூரிய வம்சம் ஆகிய படங்களில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான மாநில விருது வழங்கப்பட்டது. திருமணத்திற்குப் பிறகும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இன்றைக்கும் அம்மா பாடல்களில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற பாடல்களில் ஒன்றான, " காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா" என்ற பாடலுக்கு என்றும் இடம் உண்டு. சினிமா துறையில் மட்டும் இல்லாமல், சின்னத்திரையிலும் கோலங்கள் என்ற நெடுந்தொடரின் மூலம் பெரும் வெற்றியைப் பெற்றார்.

சர்வதேச விருது: கடந்த சில ஆண்டுகளாகவே இயக்குநர் ஆவதில் கவனம் செலுத்தி வந்த தேவயானி, குழந்தைகளுக்கான குறும்படத்தினை இயக்கியுள்ளார். கைக்குட்டை ராணி எனப் பெயரிடப்பட்ட அந்த குறும்படம், குழந்தைகளுக்கான குறும்படம் ஆகும். இந்தக் குறும்படத்தின் கதையைத் தானே எழுதி, இயக்கி, தயாரித்தும் உள்ளார். தற்போது இந்த கைகுட்டை ராணி குறும்படம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான சர்வதேச விருதினை வென்றுள்ளது. விருது பெற்ற புகைப்படங்களை தேவயானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











