ராயனுக்கு தேசிய விருது.. சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதிக்கு ஏன் இல்லை?.. ஜூரி சொன்ன விளக்கம்
சென்னை: 72வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தென்னிந்திய சினிமாக்கள் இந்த முறை விருதுகளை குவித்திருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். தமிழை பொறுத்தவரை ராயன், மெய்யழகன் உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. ஆனால் மகாராஜா, லப்பர் பந்து உள்ளிட்ட படங்களுக்கும், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கும் விருது கிடைக்காதது பெரிய ஏமாற்றத்தையும், ராயனுக்கு கொடுத்ததற்காக பெரிய விமர்சனத்தையும் எழுப்பியிருக்கிறது.
இந்திய திரை கலைஞர்களுக்கு தேசிய விருது பெறுவது கனவு போன்றது. அதற்காக அவர்கள் தங்கள் முழு உழைப்பையும் போடுவார்கள். நேற்று 72வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகராக பிரம்மயுகம் திரைப்படத்தில் நடித்ததற்காக மம்மூட்டிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ஷெனத் ஜலால் சிறந்த ஒளிப்பதிவாளருககன விருதையும், சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை வைக்கல் விஜயலட்சுமியும் பெறுகிறார்கள்.

தமிழில் என்ன?: தமிழைப் பொறுத்தவரை ராயன் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், ராஜ்குமார் பெரியசாமி அமரன் படத்துக்காக சிறந்த இயக்குநராகவும், சிறந்த பின்னணி இசையை கொடுத்ததற்காக ஜிவி பிரகாஷும், சிறந்த எடிட்டராக கலைவாணனும், சிறந்த சண்டை பயிற்சியாளராக (மகாராஜா படத்துக்காக) அனல் அரசுவும், சிறந்த துணை நடிகையாக சச்சனாவும் தேர்வாகியிருக்கிறார்கள். சிறப்பு பிரிவில் கேப்டன் மில்லருக்காக தனுஷ் இன்னொரு விருதையும் பெறுகிறார். அதேபோல் மெய்யழகன் படமும் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
எழும் விமர்சனங்கள்: நேற்று அறிவித்த விருதுகளில் தமிழில் மெய்யழகன் தவிர்த்து வேறு எந்த விருதும் உகந்தவர்களுக்கு கொடுக்கவில்லை என்ற பேச்சுக்கள் கேட்கின்றன. அதாவது லப்பர் பந்து, மகாராஜா உள்ளிட்ட படங்களுக்கு கண்டிப்பாக விருதுகள்கொடுத்திருக்க வேண்டும். ராயன் படத்தில் என்ன இருக்கிறது என்று விருது கொடுத்திருக்கிறார்கள்; விருது மீது இருக்கும் நம்பிக்கையே போய்விட்டது என்று ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் புலம்புகிறார்கள்.
கடுப்பில் எஸ்கே ரசிகர்கள்: முக்கியமாக விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் உச்சக்கட்ட கடுப்பில் இருக்கிறார்கள். மகாராஜா படத்தில் நடித்ததற்காக சேதுவுக்கோ; அமரன் படத்தில் நடித்ததற்காக எஸ்கேவுக்கோ விருது கொடுத்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இந்நிலையில் தேசிய விருது ஜூரி குழுவில் இடம்பெற்றிருந்த நடன அமைப்பாளர் கலா மாஸ்டர் இதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார்.
கலாவின் விளக்கம்: அவர் கூறுகையில், "மொத்தம் 400 படங்கள் போட்டிக்கு வந்தன. ஒவ்வொரு படமும் ஒவ்வொன்றை மீறிக்கொண்டே சென்றது. பயங்கரமான போட்டி.மகாராஜா படத்தில் அந்த பெண்ணுக்கு விருது கிடைத்திருக்கிறது. இவர்களுக்கு கொடுக்க வேண்டும், இவர்களுக்கு கொடுக்கக்கூடாது என்றெல்லாம் பார்க்கவில்லை. ராயன் படத்துக்கு விருது கிடைத்திருக்கிறது. அந்தப் படத்தை தனுஷ் அவ்வளவு அழகாக எடுத்திருப்பார். படமும் நன்றாக இருக்கும்.
நாங்கள் எல்லாம் அழுதுவிட்டோம்: அதேமாதிரி அசாமி படம் ஒன்று. சுனிதா என்ற பெண் கண் தெரியாமல் நடித்திருந்தார். அதை பார்த்துவிட்டு நாங்கள் அழுதுவிட்டோம். சிறந்த நடிகரை தேர்ந்தெடுப்பது பெரிய சவாலாக இருந்தது. அதில் மம்மூட்டி, தனுஷ், ஹிந்தி நடிகர் ஒருவர் இருந்தார். இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பது எங்களுக்கு பயங்கர போட்டியாக இருந்தது. பிறகு ஸ்பெஷல் மென்ஷனில் தனுஷுக்கு ஜூரிக்கள் வாக்கு செலுத்தினோம். இது ஒன்றும் சாதாரணமானது இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications

