பிரபல நடிகர் கலாபவன் மணி இறப்புக்கு காரணம் என்ன காரணம்? சிபிஐ அறிக்கை தாக்கல்
கொச்சி: நடிகர் கலாபவன் மணி, கொலை செய்யப்படவில்லை என்று சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
நடிகர் கலாபவன் மணி கடுமையான கல்லீரல் நோய் பாதிப்பால்தான் உயிரிழந்ததாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி. இவர் தமிழில், விக்ரமின் ஜெமினி, ஜெயம் ரவியின் மழை, விஜய்யின் புதிய கீதை, ரஜினியின் எந்திரன் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

பண்ணை வீட்டில்
கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி, கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ள பண்ணை வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சந்தேகம்
இதையடுத்து அவர் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. பிரேத பரிசோதனையில் அவர் உடலில் மெத்தில் மற்றும் எத்தில் ஆல்கஹால் இருந்ததும், க்ளோரோபைரபோஸ் என்ற கிருமிநாசினி இருந்ததாகவும் கூறப்பட்டது.

விஷம் கலந்து...
இதுகுறித்து மத்திய ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் முடிவுகள் வேறாக இருந்ததால் குழப்பம் நீடித்தது. அவர் மதுவில் விஷம் கலந்து கொல்லப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர்.

சிபிஐ விசாரணை
இதனால் கலாபவன் மணியின் உறவினர்கள், சிபிஐ விசாரிக்க கோரி கடந்த 2017-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர். கேரள உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.

அறிக்கை தாக்கல்
கடந்த இரண்டு வருட விசாரணைக்குப் பின் தனது அறிக்கையை சிபிஐ கொச்சி நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது. அதில், கலாபவன் மணி கொலை செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லீரல் பாதிப்பு
மேலும் கல்லீரல் பாதிப்பால்தான் அவர் மரணமடைந்தார் என்று சிறப்பு மருத்துவர்கள் வழங்கிய அறிக்கையை மேற்கோள் காட்டி சிபிஐ குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











