ஐடி கம்பெனியிலிருந்து வந்த அன்பு.. நல்ல கலைஞன் கலையரசன்!
சென்னை : நடிகர் கலையரசனை விட பலருக்கும் இவரை மெட்ராஸ் அன்புவாக தான் தெரியும் .தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் கலையரசன் .இவர் சிறு நடிகராக நடிப்பதில் இருந்து வளர்ந்து தற்போது தனி ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் கலையரசன் ஆரம்பத்தில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் பட்டம் பெற்று ஐடி பணியில் ஈடுபட்டு வந்தார் ,அதற்கு பிறகு அங்கு கிடைத்த வாய்ப்பின் மூலம் 2008ல் அர்ஜுனன் காதலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ,ஆனால் அந்த படம் பல பிரச்சனைகள் காரணமாக வெளியாகாமல் போனது .

அதற்கு பிறகு மிஸ்கினிடம் வாய்ப்பு கிடைக்க தொடர்ந்து இரு மிஸ்கின் படங்களில் நடித்தார் கலையரசன். நந்தலாலா மற்றும் முகமூடி ஆகும் .மேலும் பா.இரஞ்சித் அறிமுகமாகி வெற்றிபெற்ற அட்டகத்தி படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் கலையரசன். அதன் பின் கதிர் அறிமுகமாகிய மதயானை கூட்டம் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் .
2014ல் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த படம் தான் மெட்ராஸ் இந்த படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் நடித்த பின் தான் கலையரசனை சினிமா திரும்பி பார்க்க துவங்கியது. கலையரசனுக்கு ஒரு பிரேக் கொடுத்த படம் தான் மெட்ராஸ். அன்பு தான் மெட்ராஸ் படத்தின் முதல் பாதி ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு நல்ல நடிப்பை கொடுத்து இருப்பார் கலையரசன்.
அதன் பிறகு கலையரசன் முக்கிய கதாபாத்திரங்களிலும் மேலும் தனி ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்து விட்டார். உறுமீன் படத்தில் பாபி சிம்ஹாவுக்கு வில்லனாக நடித்தார். ராஜா மந்திரி, அதே கண்கள், எய்தவன், உரு, பட்டினம்பாக்கம் ஆகிய படங்களில் நேரடி ஹீரோவாகவும் நடித்து இருந்தார் .
தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பின் கீழ் பல உச்சங்களை அடைந்துள்ள கலையரசன் தனக்கு கிடைக்கும் நேரங்களில் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் மூலம் தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார். கலையரசன் அடுத்ததாக சின்னா, டைடானிக் ,முகம் மற்றும் எண்4 படங்களில் நடித்து வருகிறார். மேலும் சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் பெயரிடப்படாத படத்தில் சசிகுமாருடன் நடித்து வருகிறார் கலையரசன்.


Click it and Unblock the Notifications











