சூர்யா ரசிகர்களுக்கு இன்னொரு ட்ரீட்.. வாடிவாசல் பற்றி தரமான தகவல் சொன்ன தயாரிப்பாளர்
சென்னை: கோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சூர்யாவும், சிறந்த இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறனும் வாடிவாசல் படத்தில் இணைவார்கள் என்று கூறப்பட்டது. எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற நாவலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகவிருக்கிறது. இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தச் சூழலில் படம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியானது. சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதன் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கும் முடிவடைந்து படமானது விரைவில் வெளியாகவிருக்கிறது. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை 2 திரையிடப்பட்டது. படத்தை பார்த்த ரசிகர்கள் எழுந்து நின்று ஐந்து நிமிடங்கள் கைத்தட்டி வெற்றிமாறனையும், படக்குழுவினரையும் பாராட்டினார்கள்.

வாடிவாசல்: நாவல்களையும், சிறுகதைகளையும் படமாக்கும் முயற்சியில் வெற்றிமாறன் இப்போது தீவிரமாக இறங்கியிருக்கிறார். அப்படி அவர் இயக்கிய விசாரணை, அசுரன் ஆகிய படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்தன. அதேபோல் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை அதே பெயரிலேயே வெற்றிமாறன் படமாக்கவிருக்கிறார். சூர்யா கதாநாயகனாக நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
வாடிவாசல் டெஸ்ட் ஷூட்: வாடிவாசல் படம் குறித்த அறிவிப்பு வெளியானதுமே ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர். ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் விடுதலை படத்தை இயக்க வந்துவிட்டார் வெற்றிமாறன். இதற்கிடையே தமிழ்நாடு முழுவதுமிருந்து காளைகளை வரவழைத்து டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டது. அதில் நடிகர் சூர்யா,டாணாக்காரன் இயக்குநரும், நடிகருமான தமிழ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அந்த டெஸ்ட் ஷூட் வீடியோவே ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது.
தாமதம்: வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் முடிந்துவிட்டாலும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படவே இல்லை. விடுதலை படத்தை முடித்துவிட்டு வாடிவாசல் படத்தை தொடங்க வெற்றி திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் எதிர்பார்க்காதபடி விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் விடுதலைக்கு சென்றுவிட; சூர்யா கங்குவாவில் பிஸியானார். இதனால் வாடிவாசல் படத்தின் பணிகள் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தன. மேலும் படம் ட்ராப் ஆகிவிட்டதாகவும் கடந்த சில மாதங்களாகவே ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
கலைப்புலியின் விளக்கம்: இந்நிலையில் வாடிவாசல் படம் பற்றி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சமீபத்தில் கூறுகையில், "வாடிவாசல் படத்தின் ஷூட்டிங்கை சில நாட்கள் நடத்தினோம். ஆனால் உண்மையான காளைகளை வைத்து ஷூட்டிங் செய்வது கடினமானதாக இருந்தது. அது மிகப்பெரிய ரிஸ்க்கும்கூட. எனவே CGயில் காளைகளை உருவாக்க திட்டமிட்டு ஷூட்டிங்கை நிறுத்தினோம்.
சூர்யாதான் ஹீரோ: விடுதலை படத்தின் இரண்டாம் பாக ஷூட்டிங்கை முடித்துவிட்டு வெற்றிமாறன் வாடிவாசல் ஷூட்டிங்கை தொடங்குவார். சூர்யாதான் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பார். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. கிராஃபிக்ஸ் வேலைகளால்தான் படப்பிடிப்பு தொடங்க தாமதமாகிறது" என்றார். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











