கிராமங்களில் 100 பேர் அமரும் சின்ன தியேட்டர்கள்! - கலைப்புலி சேகரன் யோசனை
பட அதிபர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகிய மூன்று தரப்பினரும் நஷ்டம் அடைவதை தவிர்ப்பதற்காக, கிராமங்களில் 100 பேர் மட்டுமே அமரும் சிறிய திதிரையரங்குகளைத் திறக்க வேண்டும், கலைப்புலி ஜி.சேகரன் யோசனை தெரிவித்தார்.
இந்த கோரிக்கையை திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி வந்துள்ளார். நேற்று ஒருவிழாவில் இதுகுறித்து அவர் விரிவாகப் பேசினார். அவர் கூறியதாவது:
"தமிழ் திரையுலகில் சமீபகாலமாக நிறைய திரைப்படங்கள் தயாராகி வெளிவருகின்றன. ஆனால், வெற்றி பெறுவது அபூர்வமாக உள்ளன. 100 படங்கள் திரைக்கு வந்தால், ஒரு சில படங்களே வெற்றிபெறுகின்றன. இதனால், பட அதிபர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகிய மூன்று தரப்பினருமே நஷ்டம் அடைகிறார்கள்.
இந்த நஷ்டத்தைத் தவிர்ப்பதற்கு, வியாபார முறைகளில் மாறுதல்களைச் செய்ய வேண்டும். வினியோகஸ்தர்கள் மூலமும், திரையரங்க உரிமையாளர்கள் மூலமும் வரும் வசூலை மட்டுமே எதிர்பார்க்காமல், செயற்கைக்கோள் மற்றும் செல்போன் ரிங்டோன் ஆகியவற்றின் மூலம் வருமானத்தை பெருக்க வேண்டும்.
புதுமுக நடிகர்-நடிகைகள் நடித்த படங்களை பார்க்க ரசிகர்கள் தயாராக இல்லை. பிரபல நடிகர்-நடிகைகளின் படங்களையே பார்க்க விரும்புகிறார்கள். அதற்கேற்ப நாம் மாற வேண்டும்.
சிறிய தியேட்டர்கள்
கிராமங்களில், ஹோம் தியேட்டர் மாதிரி 100 பேர் அல்லது 150 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய சிறிய தியேட்டர்களை திறக்க வேண்டும். ரசிகர்கள் விருப்பத்துக்கு ஏற்ப வசதிகளை செய்து கொடுத்தால், தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பார்கள்,'' என்றார் சேகரன்.
ஏற்கெனவே இந்த யோசனையை அரசுக்குத் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











