ஒரு பொய் வழக்கும் நீதிமன்ற உத்தரவும்.... - கலைப்புலி தாணு விளக்கம்
நான் வாங்காத பணத்துக்காக என்னைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பொய் வழக்கு என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளார்.
நாகர்கோயிலைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் ஒருவர், கலைப்புலி தாணு தமக்கு ரூ 2 லட்சம் தர வேண்டும் என்று உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் தாணு சார்பில் வழக்கறிஞர்கள் உரிய நேரத்தில் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து கலைப்புலி தாணுவை கைது செய்ய நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கலைப்புலி தாணு கூறுகையில், "இது பொய்யான வழக்கு. நான் தயாரித்த திருமகன் (2007) படத்தை வாங்கித் திரையிட்டவருக்கும் இந்த தியேட்டர் உரிமையாளருக்கும் இடையிலான பிரச்சினையில், தேவையில்லாமல் என் பெயரை இழுத்து வழக்குத் தொடர்ந்துள்ளனர். அந்த தியேட்டர் உரிமையாளரிடம் நான் ஒரு பைசா கூட வாங்கவில்லை.
எந்த வகையிலும் சம்பந்தமில்லாத என் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் அந்த தியேட்டர்காரர். அவரிடம் ரூ 2 லட்சத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றும் நிலையிலா நான் இருக்கிறேன்?" என்றார்.
'தன்னைத் தேடி வரும் எத்தனையோ சினிமாக்காரர்களுக்கு கேட்காமலேயே உதவி செய்பவர் கலைப்புலி தாணு. அது திரையுலகில் உள்ள அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமல்ல, கோயில், கிராமங்களுக்கு அடிப்படை வசதி செய்தல் என நல்ல காரியங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்பவர் கலைப்புலி தாணு. அவர் மீது இப்படி ஒரு வழக்கு தொடர்ந்திருப்பதே மோசடியானது, உள்நோக்கம் கொண்டது' என திரையுலகினர் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











