வாடிவாசல் பற்றிய நல்ல செய்தி எப்போது வரும்?.. தயாரிப்பாளர் தாணு பகிர்ந்த சீக்ரெட்
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ரிலீஸானது. சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தத் திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே சூர்யாவை வைத்து அவர் வாடிவாசல் படத்தை இயக்க கமிட்டானார். ஆனால் அறிவிப்பு வந்ததோடு சரி அடுத்தக்கட்டமாக படம் என்ன நிலையில் இருக்கிறது என்பது தெரியாமலேயே இருந்தது. இந்தச் சூழலில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படம் குறித்து பேசியிருக்கிறார்.
இந்திய அளவில் அதிக ரசிகர்களை கொண்ட இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அதிக ரசிகர்கள் மட்டுமின்றி முக்கியத்துவம் பெற்ற இயக்குநராகவும் விளங்கிவருகிறார். ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதினையும், விசாரணை படத்துக்காக சர்வதேச அளவில் விருதுகளையும் குவித்திருக்கிறார் அவர். அவரது படம் என்றாலே சமூகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பக்கூடியவை. அதற்கு பிறகு சில நல்ல விஷயங்களும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை, விடுதலை 2: முக்கியமாக புத்தகங்களை படமாக்கும் முறையை வெகுஜனப்படுத்தியிருக்கிறார் வெற்றி. அப்படி அவர் இயக்கிய விசாரணை (லாக் அப்), அசுரன் (வெக்கை), விடுதலை (துணைவன்) உள்ளிட்ட படங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்திருக்கின்றன. புத்தகத்தை அப்படியே படமாக்காமல் அதில் தனது சமூக கருத்தையும் சேர்த்து கொடுப்பதால் அந்தப் படங்கள் வேறு தளத்துக்கு செல்வது வழக்கம். கடைசியாக அவரது இயக்கத்தில் விடுதலை 2 வெளியானது.
கலவையான விமர்சனம்: விடுதலை படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேசமயம் விடுதலை 2 கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால் படத்தின் ஆரம்ப காட்சிகள்; படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள், மஞ்சு வாரியரின் கதாபாத்திரம் உள்ளிட்டவைகள் பலத்த வரவேற்பை பெற்றன. முதல் பாகத்தில் சூரிக்கு இருந்த முக்கியத்துவம் இரண்டாவது பாகத்தில் இல்லை. விஜய் சேதுபதிக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாடிவாசல்: இதற்கிடையே சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்க கமிட்டானார் வெற்றிமாறன். இந்தப் படம் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படவிருக்கிறது. படத்தின் அறிவிப்பு வெளியாகி டெஸ்ட் ஷூட்டும் நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு படத்தின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. மேலும் படத்திலிருந்து சூர்யா வெளியேறிவிட்டதாகவும் தகவல்கள் வட்டமடித்தன. ஆனால் விடுதலை, விடுதலை 2 படங்களை முடிக்க லேட் ஆகிவிட்டதால்தான் வாடிவாசல் தாமதம் ஆனது என்று கூறி அவைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இயக்குநர்.
வாடிவாசல் திறப்பு எப்போது?: இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படம் குறித்து பேசியிருக்கிறார். அவர் இதுகுறித்து கூறுகையில், "விடுதலை 2 படத்தை வெற்றிமாறன் இப்போது முடித்துவிட்டார். படமும் ரிலீஸாகிவிட்டது. இந்தப் படம் முடிந்ததையடுத்து பல தயாரிப்பாளர்கள் வெற்றிமாறனிடம் சென்று கால்ஷீட் கேட்டார்கள். ஆனால் வாடிவாசல் படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்துக்கு செல்வேன் என்று கூறிவிட்டார். வெற்றிமாறனும், சூர்யாவும் விரைவில் சந்திப்பார்கள். ஜனவரி 5ஆம் தேதிக்கு பிறகு படம் பற்றிய நல்ல செய்தி வரும்" என்றார். தாணு இப்படி சொல்லியிருப்பது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











