சிவாஜியை கலாய்த்து நிகழ்ச்சி நடத்துவதா? நடிகர் பிரபு கோபம்.. 'கலக்கப் போவது யாரு' டீம் மன்னிப்பு!
சென்னை: சிவாஜி கணேசனை கலாய்த்து நிகழ்ச்சி நடத்தமாட்டோம் என்று கலக்கப் போவது டீம் பிரபுவிடம் உறுதி அளித்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், கலக்கப் போவது யாரு. காமெடி நிகழ்ச்சியான இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதில் பல நடிகர், நடிகைகளை கிண்டல் செய்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது வழக்கம்.

கிண்டல் செய்து
இந்த நிகழ்ச்சியில், பிரபல நடிகர் சிவாஜி கணேசனை கிண்டல் செய்வது போல நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இது சோஷியல் மீடியாவில் வைரலானது. இதனால், சிவாஜி கணேசன் ரசிகர்கள் ஆவேசம் அடைந்தனர். சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபுவும் கடும் கோபம் அடைந்தார். இதனால் அவர் அந்த சேனலில், இந்த நிகழ்ச்சியை தயாரிப்பவர்களிடம் பேசினார்.

எல்லை இருக்கணும்
இந்நிலையில், நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவைத் தலைவர் சந்திரசேகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். நிகழ்ச்சித் தரப்பில், இது தொடர்பாக அவர் பேசியும் இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, நடிகர்களை மிமிக்ரி செய்யும்போது ஒரு எல்லையோடு இருக்க வேண்டும்.

என்ன நினைப்பார்கள்
விஜய் டிவி நிகழ்ச்சியில், வீரபாண்டிய கட்டபொம்மன், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களில் நடித்த சிவாஜி கணேசனை, சங்கடப்படும்படியாகக் கிண்டல் செய்கின்றனர். அதுவும் மக்களிடம் அதிகமாக சென்றடையும் நிகழ்ச்சி அது. அதில் கிண்டல் செய்தால் அடுத்த தலைமுறை இளைஞர்கள், சிவாஜி பற்றி என்ன நினைப்பார்கள்?

பிரபுவிடம் மன்னிப்பு
அதனால் கண்டனம் தெரிவித்தோம். ரசிகர்கள் கடுமையாக கொந்தளித்தனர். இதையடுத்து அந்த நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுவினர், இனி அது போன்று நடக்காது என்று உறுதி அளித்துள்ளனர் என்று கூறியுள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெய், ஆதவன், நிகழ்ச்சி இயக்குநர் தாம்சன் ஆகியோர் நடிகர் பிரபுவிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











