முதல் தமிழ் பேசும் படம் காளிதாஸ்… ரூ. 8000 செலவில் ரூ.75000 லாபம்
சென்னை : தென்னிந்தியாவின் முதல் பேசும் படமான காளிதாஸ் படம் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்படம் வெளியாகி சுமார் 88 ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு ஆன செலவு வெறும் 8000 ரூபாய் தான். ஆனால் அதன் மூலம் வசூலான தொகையோ 75000 ரூபாய் ஆகும். இந்தப் படத்தில் 50 பாடல்கள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா என்றாலே அதில் கதையோடு சேர்ந்து காதல், பாடல், இசை, பைட், காமெடி, கிளைமாக்ஸ், கொஞ்சம் மசாலா இவை எல்லாம் இருந்தால் தான் மக்கள் ரசிக்கிறார்கள். அதும் நிச்சயம் பேசும் படமாக இருக்க வேண்டும். இல்லையேல் உண்மைக் கதை என்று சொல்லி முக்காடு போட்டுவிடுவார்கள்.

இப்படி ஒரு கலவையாக நாம் இன்று சினிமாவை ரசிக்கிறோம் என்றால், அதற்கு முன்னோடியாக ஒருவர் நிச்சயமா இருப்பார். ஆம் உண்மை படங்களாக இருந்த காலத்தில், முதன்முதலாக ஒரு பேசும் தமிழ் படமாக 1931ஆம் ஆண்டு சினிமாவிற்குள் அறிமுகப்படுத்தப்பட்டது காளிதாஸ் திரைப்படம்.
காளிதாஸ் திரைப்படம் தமிழில் வெளியான முதல் பேசும் படம் மட்டுமல்ல. தென்னிந்தியாவின் முதல் பேசும் படமும் அதுதான் என்பதில் தமிழர்களான நாம் பெருமைப்பட்டு கொள்ள வேண்டும்.
இன்று இந்த படத்தை பற்றி நாம் நினைவு கூறுவதற்கு காரணம் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதியன்று தான் இப்படத்தின் முதல் காட்சி சினிமா சென்ட்ரல் எனும் திரையரங்கில் திரையிடப்பட்டது. 88 ஆண்டுகள் கழித்து, அதே தினமான இன்று நாம் நமது முன்னோடிகளை நினைவு கூர்ந்து நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியமாகம். நம் முன்னோர்களின் முயற்சியால் தான் இன்று நம்மால், பல தொழில்நுட்ப வசதியோடு சிறப்பான, தரமான படங்களை பார்க்க முடிகிறது.
கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சமஸ்கிருத மகாகவி காளிதாஸ். சாகுந்தலம், மேகதூதம் எனும் அமர காவியங்களை இயற்றியவர். அவரை பற்றின கதை தான் காளிதாஸ்.
இப்படம் தமிழில் வெளியான முதல் பேசும் படம் என்று போற்றப்பட்டாலும், இதில் இந்தி, தெலுங்கு மொழிகளிலும் பேசும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன. பி.ஜி.வெங்கடேசன் மற்றும் டி.பி.ராஜலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பெரும்பாலும் இன்றைய படங்களில் இருக்கும் பாடல்கள் இரைச்சலாகவும், புரியாத பாஷையாகவும் இருக்கின்றன. அதில் சில பாடல்கள் தேவையின்றி திணிக்கப்படுகின்றன. 4 அல்லது 5 பாடல்கள் இருந்தாலும், அதில் ஒரு சில பாடல்கள் தான் மக்களால் ரசிக்கப்படுகின்றன.
ஆனால் காளிதாஸ் திரைப்படத்தில் எத்தனை பாடல்கள் இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள். கேட்டால் தலையே சுற்றிவிடும். சுமார் 50 பாடல்கள் அப்படத்தில் இடம் பெற்றிருந்தன. இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை போன்ற பல தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் பாடல்கள் அப்படத்தில் இடம்பெற்றிருந்தன. பாடல்களை எழுதிய முதல் சினிமா பாடலாசிரியரும் மதுரகவி பாஸ்கரதாஸ் தான்.
கான் பகதூர் அர்தேசீர் இரானி எனும் புகழ்பெற்ற இயக்குநரின் இம்பீரியல் மூவிடோன் கம்பெனியின் மூலம் இப்படம் தயாரிக்கப்பட்டது. படத்தை இயக்கியவர் அவரின் உதவியாளரான எச். எம். ரெட்டி.
இன்றைக்கு குறைந்த படம் 150 கோடி முதல் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரித்து வெளியிட்டு அதன் மூலம் போட்ட முதலீடை திரும்ப வசூல் செய்யாமல் நஷ்டம் அடைந்தவர் பலர். ஆனால் அன்றைக்கு காளிதாஸ் திரைப்படம் எடுப்பதற்கு செலவு செய்த பணம் வெறும் 8 ஆயிரம் ரூபாய் தான். ஆனால் வசூலித்ததோ 75 ஆயிரம் ரூபாய். கேட்கும் போதே பிரமிப்பாக இருக்கிறது அல்லவா.
1930களில் எடுக்கப்பட்ட படங்களில் பெரும்பாலானவை காலப்போக்கில் அழிந்து விட்டன. அதில் நம் பெருமைக்குரிய காளிதாஸ் திரைப்படமும் ஒன்று என்பது வருத்தத்திற்குரிய செய்தி. நம் தலைமுறையினருக்கு அப்படத்தை பார்க்கும் பாக்கியம் இல்லை என்றே சொல்ல வேண்டும். இருப்பினும் அவர்களது முயற்சி இன்று மேலோங்கியிருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைவோம்


Click it and Unblock the Notifications











