விஜய், அஜித் ரசிகர்களை ஓரம் கட்டும் பிரபாஸ் ரசிகர்கள்.. என்னப்பா இப்படியெல்லாம் செய்றாங்க!
ஹைதராபாத்: இந்திய சினிமாவே தற்போது எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கும் ஒரு படம் என்றால் அது கலி 2898 ஏ.டி படம்தான். வைஜெயந்தி மூவீஸ் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், பசுபதி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடிப்பில் அதிகப்படியான பொருட் செலவில் எடுக்கப்பட்டிருப்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படம் இன்று அதாவது ஜூன் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தியா மட்டும் இல்லாமல் உலகத்தின் பல்வேறு நாடுகளில் கல்கி 2898 ஏ.டி படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
படத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்கின்றார். கமல்ஹாசன் வில்லனாக நடிக்கின்றார். படத்தின் முதல் ட்ரைலர் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில், இது என்ன மாதிரியான படமாக இருக்கும் என்ற சந்தேகமும் குழப்பமும் இருந்தது, ஆனால் இரண்டாவதாக படக்குழு வெளியிட்ட படத்தின் ரிலீஸ் ட்ரைலர் ரசிகர்களைக் கவர்ந்ததால், படத்தில் என்னதான் செஞ்சு வெச்சு இருக்காங்க எனும் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இதனால் படத்திற்கு முன்பதிவு டிக்கெட்டுகள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனை யாருமே எதிர்பார்க்கவில்லை. மும்பையில் ஐமேக்ஸ் திரையரங்கில் ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 2300-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனையும் ரசிகர்கள் போட்டி போட்டு வாங்கினார்கள். தமிழ்நாட்டில் படத்தினை, முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தை தயாரித்து வரும் ஸ்ரீ லக்ஷ்மி மூவீஸ் வெளியிடும் உரிமத்தைப் பெற்றுள்ளனர்.

மேலும், கல்கி படத்தின் தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாட்டில் பெரிதாக எந்தவிதமான புரோமோஷனும் செய்யவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் இந்த படத்திற்கு அடுத்தடுத்து அப்டேட்டுகளைக் கொடுத்து வந்ததால், தமிழ் நாட்டிலும் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ரிலீஸுக்கு முன் வசூல்: இதன் காரணமாக சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள திரையரங்குகளில் எதிர்பார்த்ததை விடவும் அதிகப்படியாக முன்பதிவு செய்யப்பட்டது. வழக்கமாக ஒரு படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை கணித்துச் சொல்லும் சாக்நிக் வலைதளம் கல்கி 2898 ஏ.டி படமானது ரிலீஸுக்கு முன்னரே கிட்டத்தட்ட ரூபாய் 37 கோடி வசூல் செய்து விட்டதாக பதிவிட்டிருந்தது.

திருவிழாக் கோலம் பூண்ட திரையரங்கம்: படத்தின் ட்ரைலர் வெளியீட்டின்போதே பிரபாஸ் ரசிகர்கள் திரையரங்கை திருவிழாபோல் மாற்றினார்கள். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் படத்தின் ட்ரைலர் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் படம் ரிலீஸ் நாளான இன்று, அதிகாலை சிறப்புக் காட்சிக்கு படக்குழு அனுமதி வாங்கியிருந்தது. இதனால் இரவில் இருந்தே திரையரங்கில் திரண்ட ரசிகர்கள், திரையரங்கைச் சுற்றிலும் பிரபாஸுக்கு பேனர் வைப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.

டி.ஜே. இசை: இந்நிலையில் திரையரங்க வளாகத்திற்குள் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு, நம்மூரில் தீபாவளி, பொங்கலுக்கு ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள் ரிலீசானால் எப்படி கொண்டாடுவார்களோ அப்படி கொண்டாடிக்கொண்டு உள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரின் வளாகத்திற்குள் டி.ஜே. இசைக்கு ஏற்பாடு செய்த ரசிகர்கள், குத்தாட்டம் ஆடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











