Kalki Story: கல்கியின் காவலன் தான் பிரபாஸ்.. மொத்த கதையையே ரிவீல் செய்த ஃபைனல் வார் டிரெய்லர்!
சென்னை: வைஜெயந்தி மூவிஸ் பிரம்மாண்டமாக 600 கோடி பட்ஜெட்டில் ஒரு புதிய இதிகாசத்தையே உருவாக்கி இருக்கிறது. நடிகர் பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்த நிலையில், கல்கி படத்தில் விஷ்ணுவின் 10வது அவதாரமாக நடித்திருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குநர் நாக் அஸ்வின் செம ட்விஸ்ட்டாக அவருக்கு பைரவா எனும் கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார்.
கல்கி படத்தின் முதல் டிரெய்லரில் கதை பெரிதாக பிடிபடாத நிலையில், 2வது டிரெய்லரில் படத்தின் மொத்த கதையையும் ரிவீல் செய்து விட்டனர். பிரம்மாண்ட போர்க் காட்சிகள் எல்லாம் ஹாலிவுட் தரத்தில் இருக்க மகாபாரத கதையின் டச் ஆங்காங்கே எட்டிப் பார்த்து மெய் சிலிர்க்க வைக்கின்றன.

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, ஷோபனா, பசுபதி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், சந்தோஷ் நாராயணின் இசை படத்திற்கு பெரிய பலமாக அமைகிறது.
கல்கி படத்தின் கதை இதுதானா?: கல்கி 2898 ஏடி படத்தில் இந்த உலகத்தை வேற்று கிரகவாசிகள் ஆக்கிரமித்து விடுவது போல கமல்ஹாசனின் தோற்றம் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், தீபிகா படுகோனின் வயிற்றில் வளரும் குழந்தை தான் கல்கி அவதாரம் என்றும் கிருஷ்ணரை போல அவரையும் கொலை செய்ய துடிக்கும் நிலையில், அந்த குழந்தையை பாதுகாக்க சாபம் பெற்ற அஸ்வத்தாமா தனது தவறுகளை உணர்ந்து கல்கியை காப்பாற்ற காவலனாக வருகிறார். ஆனால், அவரை எதிர்த்து தீபிகா படுகோனை வில்லன் கமலிடம் ஒப்படைத்து பெரிய தொகையை பெற வேண்டும் என வரும் பைரவா பிரபாஸ் இறுதியில் அந்த கல்கி கடவுளை காப்பாற்றும் நாயகனாக மாறுவது தான் இந்த கல்கி படத்தின் கதை என்பது டிரெய்லரில் வெளிப்படையாக தெரிகிறது. நாக் அஸ்வின் புதிய புராணத்தை உருவாக்கும் முயற்சியில் பக்காவான ஒரு கதையை உருவாக்கி உள்ளார் என்றே தெரிகிறது.
ஹனுமான் போல பைரவா?: ராமாயணத்தில் ராமரை காப்பாற்ற ஹனுமான் அவதாரத்தையே சிவன் தான் எடுத்திருப்பார் என புராண கதைகள் கூறுகின்றன. இந்நிலையில், அதை போல கல்கி படத்தில் கல்கிக்கு பாதுகாவலனாக பைரவா எனும் கதாபாத்திரத்தில் பிரபாஸ் கதாபாத்திரத்தை நாக் அஸ்வின் உருவாக்கியுள்ளார் என தெரிகிறது. நிச்சயம் படம் வந்தால் நார்த் இந்தியாவில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என்பது கன்ஃபார்ம்.
பாகுபலி 2 வசூலை முந்துமா?: பாகுபலி 2ம் பாகம் 1800 கோடி வசூல் வேட்டை நடத்திய நிலையில், தங்கல் திரைப்படம் 2000 கோடி வசூலை ஈட்டியிருக்கிறது. இந்த 2 படங்களின் வசூலையும் கல்கி 2898 ஏடி முறியடிக்குமா? அல்லது 1000 கோடி வசூலையாவது அள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அஸ்வத்தாமா பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தி சிசுவை அழிக்க முயற்சிக்க கிருஷ்ணர் அந்த சிசுவை காப்பாற்றும் கதை மகாபாரதத்தின் இறுதியில் இடம்பெறும். அந்த கதையுடன் தொடர்புபடுத்தி கல்கி கதையை உருவாக்கி இருக்கிறார் நாக் அஸ்வின். வால்மீகி ராமாயணத்தையும் வியாசர் மகாபாரதத்தையும் உருவாக்கிய நிலையில், கல்கி கதையை நாக் அஸ்வின் உருவாக்கி உள்ளார். எந்தளவுக்கு ரசிகர்களை இந்த கதை ஈர்க்கிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











