Kalki 2898 AD Day 6 BOC: ஆறு நாட்கள் ஆச்சு.. அசராமல் கோடிகளை அறுவடை செய்யும் கல்கி.. முழு விபரம்!
சென்னை: இந்திய சினிமாவில் தற்போது இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவிலும் சக்கைபோடு போட்டுவரும் படம் என்றால் அது நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள கல்கி 2898 ஏ.டி படம்தான். ரூபாய் 600 கோடி பட்ஜெட்டில் இந்திய அளவில் மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட முதல் படம் கல்கி 2898 ஏ.டி. இதற்கு முன்னர் பிரம்மாண்டமான பொருட்செலவில் பல படங்கள் வெளிவந்திருந்தாலும் கல்கி படத்திற்காக செலவிடப்பட்ட தொகை என்பது மற்ற படங்களைவிட மிகமிக அதிகம். இது ஒரு படமாக மட்டும் இல்லாமல் இந்த முதல் பாகத்தை மைய்யப்படுத்தி கல்கி சினிமாட்டிக் யுனிவர்ஸ் வெளிவரப்போகின்றது.
நடிகர்கள் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், பசுபதி, அன்னாபென் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தை பாராட்டிய ரசிகர்களில் பெரும்பான்மையானோர் சந்தோஷ் நாராயணனின் இசையையும் பாராட்டி வருகின்றனர். படம் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கிடைத்த வரவேற்பைப்போல் மற்ற நாடுகளிலும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படம் வசூலை வாரிக்குவித்து வருகின்றது.

படத்திற்கு இந்திய பிரபலங்களான ரஜினிகாந்த், சிரஞ்சீவி, சூர்யா, யாஷ், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, அபிஷேக் பச்சான் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் படத்தை பாராட்டினர். குறிப்பாக படத்தின் மேக்கிங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. மகாபாரதக் கதைக்களத்தோடு பின்னப்பட்டு படம் எடுக்கப்பட்டிருந்தாலும் சில ரசிகர்கள் படம் புரியவில்லை எனக் கூறினாலும் அதே ரசிகர்களுக்கு படத்தின் மேக்கிங் திருப்தி அளிப்பதாகவும் கூறிவருகின்றனர்.

வசூல் வேட்டை: மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் ஆன கல்கி படம் முதல் நாளில் மட்டும் 191.5 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறித்தது. இரண்டு நாட்களில் படம் ரூபாய் 298.5 கோடிகளை அள்ளியது. முதல் நான்கு நாட்களில் படம் ரூபாய் 555 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்தது.

வட அமெரிக்காவில் 100 கோடி: இந்நிலையில் படத்திற்கு ப்ரீ புக்கிங் காலத்தில் இருந்தே வட அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைத்துவந்தது. இந்நிலையில் வட அமெரிக்காவில் மட்டும் படம் இதுவரை இந்திய மதிப்பில் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் வரும் 5ஆம் தேதியில் இருந்து படம் பிரிட்டனில் மலையாளத்திலும் திரையிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் உள்ள பிரிட்டன் வாழ் கேரளா ரசிகர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது. அதேபோல் ரஷ்யாவில் ஒரு லட்சத்து 27ஆயிரத்து ரூபிளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. ரூபிள் என்பது ரஷ்ய நாட்டு பணத்தின் பெயர்.

5வது நாள் விபரம்: படத்தின் 5வது நாள் வசூல் விபரம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றாலும், படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் குறித்த தகவல்களை பல்வேறு வலைதளங்கள் படத்தின் 5வது நாள் வசூல் விபரத்தினை வெளியிட்டது. அதன் அடிப்படையில் ஐந்தாவது நாளில் படம் கிட்டத்தட்ட ரூபாய் 84 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் கிட்டதட்ட ரூபாய் 36 கோடிகளுக்கு மேலும் வெளிநாடுகளில் 45 கோடிகளுக்கு மேலும் வசூல் செய்துள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.

6வது நாள் வசூல்: அதேபோல் 6வது நாள் வசூல் குறித்த விபரத்தினை சாக்னிக் வலைதளம் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் படம் கிட்டத்தட்ட ரூபாய் 28 கோடிகளை வசூல் செய்திருக்கும் என குறிப்பிட்டுள்ளது. இதில் அதிகமாக ஹிந்தியில் ரூபாய் 14 கோடிகளும் தெலுங்கில் கிட்டத்தட்ட ரூபாய் 12 கோடிகளும் வசூல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் தமிழ் மற்றும் மலையாளத்தில் தலா ரூபாய் 1.2 கோடிகள் வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் படம் முதல் 6 நாட்களில் கிட்டத்தட்ட 700 கோடிகளை வசூல் செய்துள்ளது என யூகிக்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











