கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி
சென்னை : கொரோனா நிவாரண நிதிக்காக கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் 50 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால், 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறோம்.இந்தியாவில் கொரோனாவினால் 5734 பேரும் பாதிக்கப்பட்டும். 166 பேர் பலியாகியும் உள்ளனர்.

தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பதால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பேரழிவில் இருந்து மக்களை பாதுகாக்க கோவிட்-19 பேரிடர் மேலாண்மை திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சியில் தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும் எனபொதுமக்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், சக குடிமக்களின் நிதி நெருக்கடியை சமாளிக்க, மக்களுக்கு உதவிட, கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கியிருக்கிறது. ஏற்கனவே ஏஜிஎஸ் கல்பாத்தி சகோதரர்கள் சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ரூ.15 லட்சம் நிதி உதவி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம், மல்டிபிளெக்ஸை இயக்கும் ஏஜிஎஸ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் இக்குழுமத்தின் மூலோபாய முதலீடுகளை நிர்வகிக்கும் கல்பாத்தி இன்வெஸ்ட்மென்ட்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இக்குழுமம் கல்பாத்தி சகோதரர்கள், கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரால் நிர்வகிக்கப்படுகிறது.
கல்பாத்தி ஏ அர்ச்சனா ஏஜிஎஸ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குநராக உள்ளார். கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம், இந்த நெருக்கடியான நேரத்தில் சக குடிமக்களின் துன்பங்களைத் தணிக்க, தாராளமயமான பங்களிப்புகளைத் தந்து உதவுமாறும் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.


Click it and Unblock the Notifications











