Don't Miss!
- News ஒரு ஓட்டுக்காக போராடிய "சர்க்கார்" விஜய் நிலையா இது.. கட்சி தலைவரான முதல் தேர்தலிலேயே ஏமாற்றம்
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கமல்-68..தமிழ் திரையுலகின் நாட் அவுட் நாயகன் கமல்ஹாசன்
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் 68 வது பிறந்தநாள் இன்று, தன்னுடைய 6-வது வயதில் நடிக்க வந்த கமல்ஹாசன் 62 ஆண்டுகளாக திரை துறையில் இருக்கிறார்.
கமல்ஹாசனுடைய திரைத்துறை வாழ்க்கை குழந்தை நட்சத்திரமாக தொடங்கியது. ஆனால் சினிமாவில் என்னென்ன துறைகள் இருக்கிறதோ அத்தனையிலும் கால் பதித்து முன்னுக்கு வந்தவர் கமல்.
70 களின் இறுதியில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடத்தொடங்கியவர் இன்றுவரை நாட் அவுட் நாயகனாக தொடர்கிறார்.
Happy Birthday Kamal Haasan: உலகநாயகன் கமல்ஹாசனின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
கமலை கண்டெடுத்த மெய்யப்ப செட்டியார்
1960 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்து அதற்கான வேலைகள் தொடங்கினர். அந்த நேரத்தில் அந்த படத்தின் நடிக்க குழந்தை நட்சத்திரம் தேவைப்பட்டது. அப்போது புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரம் டெய்ஸி ராணியை ஜெமினியின் மகனாக நடைக்க வைக்க முடிவு செய்தனர். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் விரும்பினார். களத்தூர் கண்ணம்மா படபிடிப்புகள் தொடங்கிய நிலையில் தற்செயலாக ஏவிஎம் மெய்யப்ப செட்டியாரின் மருத்துவர் தன்னுடன் ஒரு சிறுவனை அழைத்து வந்திருக்க அவனது சேட்டைகளை பார்த்து மெய்யப்ப செட்டியாருக்கு பிடித்து போக இந்த பையனையே களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தார்.
முதல் படத்திலேயே தேசிய விருது
அப்படி வாய்ப்பு பெற்ற கமல்ஹாசனின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடல் முழு பாடலாக இருக்க வேண்டும் என தயாரிப்பாளர் மெய்யப்ப செட்டியார் சொல்ல இயக்குனர் பிரகாஷ் ராவ் அதற்கு ஒப்புக்கொள்ள மறுக்க இந்த சண்டையால் இயக்குனர் படத்தை விட்டு விலகினார் பின்னர் பீம் சிங் படத்தை இயக்கினார். திரையுலகில் அறிமுகம் ஆகும் பொழுதே கமலை சுற்றி தான் எல்லாம் என்பது போல் இந்த நிகழ்வு அமைந்தது. அதன் பின்னர் படத்தின் டைட்டில் கார்டில் கமல்ஹாசன் பெயரை சாதாரணமாக போடாமல் "தென்னகத் திரைவானிற்கு ஏவிஎம் நிறுவனம் அளிக்கும் புதிய குழந்தை நட்சத்திரம்" என போடச்சொன்னார் மெய்யப்ப செட்டியார். அவ்வாறு முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் கமல். முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார் கமல்.
எம்ஜிஆர்-சிவாஜியை குழப்பிய கமல்
அதன் பின்னர் எம்ஜிஆருடன் ஆனந்த ஜோதி படத்திலும், சிவாஜி கணேசன் உடன் பார்த்தால் பசி தீரும் படத்தில் இரட்டை வேடத்திலும் குழந்தை நட்சத்திரமாக காவல் நடித்தார். பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து நடித்தார். அதன் பின்னர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இன்றி இருக்கும் நிலை ஏற்பட்டது. சினிமாவில் எப்படியாவது இருக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தில் நடனம் கற்றார் கமல். பின்னர் உதவி இயக்குநராக தங்கப்பன் மாஸ்டரிடம் பணியாற்றினார். உதவி நடன இயக்குனராக எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்டோருக்கு நடனம் காட்சியமைப்புகளில் அமைத்து கொடுப்பதில் பணியாற்றி உள்ளார். அது போன்று பணியாற்றும் நேரங்களில் வேண்டுமென்றே எம்ஜிஆருக்கு சிவாஜிக்கு அமைக்கும் நடன ஸ்டைலையும், சிவாஜி கணேசனுக்கு எம்ஜிஆரின் நடன ஸ்டைலையும் கமல் கொடுத்துள்ளார் இதற்காக சிவாஜி கணேசனிடம் செல்லமாக திட்டும் வாங்கியுள்ளார் கமல் என்று சொல்வார்கள்.
சிவாஜியின் மூத்த மகன் கமல்
சிவாஜி கணேசனின் மடியில் தவழ்ந்தவன் நான் என்று கமல் சொல்வார். ராம்குமார், பிரபுவைவிட அதிக நேரம் நான் தான் அவரது மடியில் வளர்ந்தேன், அதனால் நான்தான் முதல் பிள்ளை அதன் பிறகு தான் ராம்குமார், பிரபு எல்லாம் என்று கமல் சொல்லுவார். அந்த அளவுக்கு சிவாஜி வீட்டில் எப்பொழுதும் செல்ல பிள்ளையாக சிவாஜியின் மடியில் தவழ்ந்து வளர்ந்தவர் கமல்ஹாசன். அதனால் தான் என்னவோ கமலுக்குள் இருந்த நடிப்பு கலைஞர் பின்னர் பெரிய அளவில் அவதாரம் எடுத்தார் என்று சொல்லலாம். பதின்ம வயதில் ரெண்டுங்கெட்டானாக இருந்த கமல்ஹாசனுக்கு திரை துறையில் சரியான வாய்ப்புகள் அமையாமல் இருந்தது.
இயக்குநர் ஆசையில் கமல்..கண்டித்த பாலச்சந்தர்
அவ்வப்போது மலையாள படங்களில் சில காட்சிகளில் நடித்து வந்தாலும் பெரிதாக கமலுக்கு வாய்ப்புகள் அமையவில்லை தமிழில் நீண்ட காலத்திற்குப் பிறகு சில வாய்ப்புகள், இரண்டாம் கதாநாயகன் வாய்ப்புகள் கிடைத்தன. ஒரு கட்டத்தில் கமல்ஹாசன் இயக்குனராக வேண்டும் என்ற தனது இலட்சியத்தில் உறுதியாக இருந்தார். அதை பாலச்சந்தரிடம் சொல்ல ஒழுங்காக போய் நடிக்கிற வேலையை பார் என்று கண்டித்து கமல்ஹாசனை நடிப்புக்கு திருப்பியவர் பாலச்சந்தர். அப்படி திருப்பியது மட்டுமல்லாமல் கமல்ஹாசனுக்கு அரங்கேற்றம் படத்தில் முக்கியமான ஒரு ரோலை கொடுத்து வாலிபத்திற்கும் மாணவப் பருவத்திற்கும் இடையே இருந்த கமல்ஹாசனை மீண்டும் தமிழ் படத்தில் அடையாளம் காட்டினார் பாலச்சந்தர். இதன் பின்னர் தொடர்ந்து அவருக்கு அபூர்வ ராகங்கள், மன்மதலீலை என பல படங்களில் கதாநாயகனாக வாய்ப்பு கொடுத்து பாலச்சந்தர் கமல்ஹாசனை முன்னுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றினார்.
பிரம்மாண்டத்தைவிட நடிப்பை நேசித்த கமல்
தனக்கு கிடைத்த வாய்ப்புகளை கமல்ஹாசன் நன்கு பயன்படுத்திக் கொண்டார் நடிப்பிலும், நடனத்திலும், சண்டை காட்சிகளிலும் ஆங்கிலேய பாணியை பின்பற்றுவதும் புதிய வகையான ஸ்டைல்களை செய்வதன் மூலம் என கமலஹாசன் 70 களின் தமிழ் ரசிகர்கள் மனதில் பதிந்தார். அதே நேரத்தில் புதிய முயற்சிகளை எடுப்பதற்கு அவர் தயங்கவில்லை 1977 ஆம் ஆண்டு வெளிவந்த 16 வயதினிலே படத்தில் துணிந்து கோவணம் கட்டிக்கொண்டு கதாநாயகனாக கமல்ஹாசன் நடித்தார். என்னடா கோவணம் எல்லாம் கட்டிக்கிட்டு நடிக்கிறீங்க என்று பலர் அன்று கேட்டதாகவும் அன்று சாதாரணமாக பார்க்கப்பட்ட படம் இன்று மிகப் பிரமாண்டமாக அனைவராலும் பார்க்கப்படுகிறது ஆகவே பட்ஜெட் முக்கியமல்ல நாம் ஏற்கும் ரோல் தான் முக்கியம் என்று சமீபத்தில் கூட கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த அளவிற்கு காட்சிகளில் தன்னுடைய முத்திரையை பதிப்பதற்காக எந்த அளவுக்கும் செல்ல தயங்காதவராக கமல்ஹாசன் இருந்தார்.
கமல்- ரஜினி எடுத்த அந்த முக்கிய முடிவு
அதே காலகட்டத்தில் அறிமுகமான ரஜினிகாந்த் உடன் கமல்ஹாசனுக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் பாலச்சந்தரின் மாணவர்கள் என்பதால் பல படங்களில் ஒன்றாக நடித்தனர். இருவரும் ஸ்டைல் மன்னர்களாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஸ்டைலுக்கு ரஜினி தான், நாம் வேறு பாணியை பின்பற்றுவோம் என்று கமல் முடிவெடுத்தார். அதேபோன்று ஆடுபுலி ஆட்டம் படம் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இருவரும் இனி சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்ததாகவும் அந்த முடிவு எவ்வளவு புத்திசாலித்தனமானது என்பது பின்நாளில் சரியாக இருந்தது என்றும் கமல் ஒரு முறை கூறியிருந்தார். இருவரும் பிரிந்து தனித்தனி பாதையில் கதாநாயகர்களாக நடிக்க தொடங்கிய 78, 79, 80 ஆண்டுகளில் இருவருமே உச்ச நட்சத்திரங்களாக உயரத் தொடங்கினார்கள்.
80 களில் ஆளத்தொடங்கிய கமல் ரஜினி
எம்ஜிஆர் முதல்வரானதால் திரையுலகை விட்டு விலகிய நிலையில், நீண்ட ஆண்டுகளாக நடித்து வரும் சிவாஜிக்குப்பின் மாற்றம் வேண்டும் என திரையுலகம் ஒரு புதிய மாற்றத்தை எதிர்பார்த்த பொழுது சுறுசுறுப்பான இளைஞர்களாக கமலும், ரஜினியும் அன்றைய வழக்கமான சினிமா பாதையை விட்டு புதிய கோணத்தில் இருவரும் நடிக்கத் தொடங்கியதால் தமிழ் திரையுலகம், ரசிகர்கள் அவர்களை மிகுந்த வரவேற்பு கொடுத்து அரவணைத்துக் கொண்டார்கள். இதனால் ரஜினியும் - கமலும் திரை உலகில் உச்ச நட்சத்திரம் ஆக தலை எடுக்கத் தொடங்கினார்கள். நடிப்புக்கு கமல் ஆக்சனுக்கு ரஜினி என ரசிகர்கள் பிரித்துக் கொள்ள அவ்வப்போது ஆக்ஷன் படங்களில் கமல்ஹாசன் தலை காட்டினாலும் தான் வேறு மாதிரி தான் என்பதை அவ்வப்போது நிரூபிக்க மிக வித்தியாசமான படங்களை எல்லாம் கொடுக்க ஆரம்பித்தார். அவருடைய நடிப்புக்காக சிறந்த நடிகருக்கான விருது மூன்றாம் பிறை திரைப்படத்தில் இளம் வயதிலேயே அவருக்கு கிடைத்தது. கமல்ஹாசனுடைய வித்தியாசமான நடிப்பால் அவர் ஒருபுறம் உச்ச நட்சத்திரமாக உயரத் தொடங்கினார்.
தமிழ் சினிமாவில் 13 புதிய டெக்னாலஜிகளை கொண்டுவந்த கமல்
கமல்ஹாசனை சுற்றி எப்பொழுதும் அறிவார்ந்தவர்கள் கூட்டம் இருக்கும். சுஜாதா, கிரேசி மோகன் போன்றவர்களை சினிமாவுக்கு இழுத்து வந்தவர் கமல். சினிமாவை மிக அதிகமாக நேசிக்கும் கமலஹாசன், தான் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவிலேயே கொட்டியவர் என்று திரையுலகில் சொல்வார்கள். அதேபோல் வருமான வரியை முறையாக செலுத்தி வருமானவரித்துறையின் பாராட்டுதலையும் பெற்றவர் கமல்ஹாசன். சினிமாவை மிகவும் நேசித்த கமல்ஹாசன் சினிமாவினுடைய அத்தனை நுணுக்கங்களிலும் கவனத்தை செலுத்தியவர் என்று கூறலாம். அவர் இறங்காத துறையே இல்லை என்று சொல்லலாம். சினிமாவில் மிக அதிக அளவில் புதிய டெக்னாலஜியை புகுத்தியவர் கமல்ஹாசன் தான். 13 வகையான புதிய முயற்சிகளை சினிமாவில் அவர் எடுத்துள்ளார்.
புதிய முயற்சிகளை எடுத்த கமல்
கமல்ஹாசன் ஒருவர் மட்டுமே புதிய முயற்சிகளை தமிழ் சினிமாவில் எடுத்து அறிமுகப்படுத்தினார். வித்தியாசமான மேக்கப்புகளில் வித்தியாசமான நடிப்பின் மூலம் தமிழக சினிமாவை ஹாலிவுட் அளவிற்கு இந்திய அளவில் பேச வைத்தவர். கமல்ஹாசன் முதன் முதலில் பார்வை மாற்றுத்திறனாளியாக தன்னுடைய நூறாவது படத்தில் கதாநாயகனாக துணிச்சலுடன் நடித்தார். அந்த படம் ஓடாவிட்டாலும் அவர் எடுத்த முயற்சி பாராட்டுத்தக்கது. 16 வயதினிலே தொடங்கி அவ்வை சண்முகி, தசாவதாரம், அபூர்வ சகோதரர்கள், குணா, இந்திரன் சந்திரன் என சினிமாவிற்காக அவர் எடுக்காத முயற்சிகளே இல்லை எனலாம். அதிலும் அவர்தான் முதலிடம் அதிக அளவு கதாபாத்திரங்களில் நடித்த தசாவதாரமாக இருக்கட்டும் படம் முழுவதும் பெண் வேடத்தில் நடித்த அவ்வை சண்முகியாகட்டும் அத்தனை முன் முயற்சிகளுக்கு அவரே முழு காரணமாக இருந்துள்ளார். இதனால் கமல்ஹாசனை அனைவரும் பிரமிப்புடன் பார்ப்பார்கள்.
ரஜினி - கமலின் ஆத்மார்த்த நட்பு
கமல்ஹாசன் தான் கற்றது சிவாஜி கணேசன், நாகேஷ் போன்றவர்களிடமிருந்து தான் என்று அடக்கத்துடன் எப்போதும் கூறுவார். "1980 க்கு முன் நடிப்பை கற்றுக்கொள்ள வேண்டுமா சிவாஜி கணேசனின் பார் என்பார்கள், இப்பொழுது படிப்பை கற்றுக் கொள்ள வேண்டுமா கமல்ஹாசனை பார் உனக்கு தன் நடிப்பு தானாக வரும்" என்று ரஜினிகாந்த் ஒரு முறை மேடையில் பகிரங்கமாக கூறினார். கமல் ரஜினியின் நட்பு ஆழமானது ரஜினிகாந்த் ஆரம்பத்தில் திரையுலகில் காலூன்ற முயற்சி எடுத்த பொழுது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் கமல் என்று சொல்லலாம். தனக்கு போட்டியாக ஒருவர் வருகிறார் என்கிற காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லாமல் ரஜினிகாந்துக்கு ஒரு நண்பனாக அனைத்து உதவிகளும் செய்தவர் கமல் என்று சொல்லலாம். திரையுலகிலும் சரி ரஜினிகாந்தின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்ட பொழுதும் சரி ஒரு நண்பனாக தலையிட்டு பிரச்சினைகளை தீர்த்து இன்றுவரை சிறந்த நட்புடன் இருந்து வருபவர் என்று சொல்லலாம். ரஜினி-கமல் இடையே இருக்கும் இந்த நட்பு அது எந்த விதத்திலும் ஒரு அளவீடு செய்து குறிப்பிட முடியாத அளவிற்கு உன்னதமானது என்று சொல்லலாம்.
நவீனங்களின் நாயகன் கமல்ஹாசன்
கமல்ஹாசன் வெறும் திரைப்படம் நடிகர் மட்டுமல்ல அவர் தமிழ் திரையுலகின் அனைத்து விதமான ஒரு முகமாக இருந்து வருகிறார் என்று சொல்லலாம். பாலிவுட் ஆகட்டும், தென்னிந்திய இந்தியா முழுவதும் உள்ள பல மொழிகள் உள்ள படங்களாகட்டும் அனைத்திலும் கமல்ஹாசன் நடித்துள்ளார். அது மட்டுமல்ல தமிழ் திரையுலகில் ஏற்கனவே குறிப்பிட்டபடி பல புதுமைகளை அமல்படுத்திய கமலஹாசன் இன்றுவரை தனது 68 வது வயது வரை இளைஞர்களை, புதிய டெக்னீசியன்களை, புதிய வரவுகளை அரவணைத்து அதன் மூலம் புதிய படைப்புகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த விக்ரம் படத்தை சொல்லலாம். தன்னுடைய பரம ரசிகரான லோகேஷ் கனகராஜை நம்பி படத்தை கொடுத்து ஈகோ எதுவும் பார்க்காமல் மூன்று கதாநாயகர்களை தன்னுடன் நடிக்க வைத்து அந்த படத்தை ஹிட்டடிக்க வைத்தார் கமல்ஹாசன். இன்றும் அவருடைய கலைப்பணி தொடர்கிறது.
கமலின் திறமைக்கு மக்கள் அளிக்கும் அங்கிகாரம்
அவரது பிறந்த நாளன்று மீண்டும் நாயகன் படத்திற்கு பின்னர் மணிரத்னத்துடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற ஒப்பந்தமாகியுள்ளார் என்பது கமல் ரசிகர்கள் அனைவருக்கும் மிக சந்தோஷமான செய்தி. அதேபோல் இந்தியன் 2 படம் விரைவில் வர உள்ளது அதையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி புதுமைகளின் நாயகனாக கமல்ஹாசன் இயங்கிக் கொண்டிருப்பது தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு சொத்து என்று சொல்லலாம். 68-வது வயதில் அடி எடுத்து வைக்கும் கமல்ஹாசன் இன்றும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருப்பது அவருடைய திறமைக்கு மக்கள் அளிக்கும் அங்கிகாரம், மதிப்பு என்று சொல்லலாம்.