டிடிஎச்சில் வருமா விஸ்வரூபம்?- கமல் மழுப்பல்

"விஸ்வரூபம் படம் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் ஆதரவுடன் வருகிற 25-ந் தேதி, 500 தியேட்டர்களுக்கு மேல் தமிழ்நாடு முழுவதும் வெளியாகும்'' என்று கமல்ஹாசன் அறிவித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களின் கூட்டு கூட்டம், பிலிம்சேம்பரில் நேற்று மாலை நடந்தது.
அதில், கமல்ஹாசன் கலந்து கொண்டார்.அவருக்கு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சார்பில் மோதிரம் அணிவித்து, பொன்னாடை போர்த்தினார்கள்.
பின்னர் கமல் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதலில் இவர்களை அம்பு என்று நினைத்தேன். இப்போது அது அன்பு என்று புரிந்துகொண்டேன். இந்த அன்புக்கு முன்னால் பணிவு ஒன்றுதான் நல்ல ஒழுக்கம். இவர்களின் அன்புக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன் (இவர்களுக்குதான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக கமல் நேற்று முன்தினம் தெரிவித்தார்!).
'விஸ்வரூபம்' படத்தின் மூலம் நான் பட்ட கடன் தீரும் என்று இங்கே பேசினார்கள். ரே ஒரு கடன் மட்டும் தீராது. அது தமிழ் ரசிகர்களுக்கு நான் பட்ட கடன்.
35 படங்கள் வரை நான் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தபோது, என்னை தூக்கி விட்டவர், கே.பாலசந்தர். இந்திப் பட உலகுக்கும் என்னை தூக்கி விட்டவர், அவர்தான்.
இதுபோன்ற ஆசிகள் தமிழ் திரையுலகில் எனக்கு நிறைய இருக்கிறது. நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, எனக்கு அதிக பலமாக இருக்கிறது.உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். வீணடிக்க மாட்டேன்.
டி.டி.எச். நிறுவனங்களுடன்...
நான் நல்ல தகவலை சொல்வேன் என்று இங்கு கூறினார்கள். 'விஸ்வரூபம்' படம் டி.டி.எச்.சில் எப்போது ஒளிபரப்பப்படும்? என்பதை இப்போது சொல்ல முடியாது. டி.டி.எச்.காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, அந்த தகவலை உங்களுக்கு சொல்கிறேன்.
ஒட்டுமொத்த தமிழகமெங்கும் திரையரங்க உரிமையாளர்களின் ஆதரவுடன் 'விஸ்வரூபம்' படம் 25-ந் தேதி, 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரைக்கு வரும். திரையரங்க உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்து இருக்கிறீர்கள். அது எனக்கு புத்துணர்வை தரும் என்று நம்புகிறேன்.
தெலுங்கு - இந்தி
தெலுங்கிலும் 25-ந் தேதி படம் திரைக்கு வரும். இந்தியில் எப்போது வெளியிடுவது என்பதை அவர்களுடன் பேசி முடிவு செய்ய வேண்டும்," என்றார்.
விஸ்வரூபத்தை டிடிஎச்சில் பணம் கட்டியவர்களுக்கு இதுவரை சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் சரி. கமலும் சரி உரிய பதிலைச் சொல்லவில்லை என்பதே உண்மை.
இந்த கூட்டுக் கூட்டத்தில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தலைவர் சேலம் முருகேசன், பொருளாளர் எல்.சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.


Click it and Unblock the Notifications











