Kamal Haasan: மிஸ் யூ கமல் சார்.. நீங்க இல்லாத அந்த இடம்.. பாவம் அந்த மனுஷன் போய் மாட்டிக்கிட்டாரு!
சென்னை: உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் என்றாலும் கமல்ஹாசன் என்று சொல்லும்போதே உடனே வந்து விழும் வார்த்தையாக இருப்பது உலக நாயகன் என்ற சொல்தான். தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம் அவ்வப்போது நடைபெற்று வந்துள்ளது. பல நடிகர்களும் தங்களை அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும், தான் அந்த ஸ்டார், இந்த ஸ்டார் என்று எல்லாம் புகழ் பாடிக் கொண்டார்கள். ஆனால் எந்த நடிகரும் தன்னை அடுத்த உலக நாயகன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. அதற்கு காரணம் பல இருந்தாலும், மிகவும் முக்கியமான காரணம், "Being a Kamal Haasan Is Not Easy Bro".
எந்த திரைக்கலைஞனும் தன்னை ஒரு சினிமா விவசாயி என்று சொல்லிக் கொண்டது இல்லை. அதை தைரியமாக மட்டுமல்லாமல், மிகவும் மகிழ்ச்சியாகவும் சொல்லிக் கொள்ளும் ஒரே கலைஞன் கமல்ஹாசன் மட்டும் தான். இவரை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த கலைஞர்கள் பலர் இருந்தாலும், கமல்ஹாசன் என்ற கலைஞன் எழுப்பி வைத்திருக்கும் சாம்ராஜ்யத்தின் கதவுகளைக் கூட பலராலும் தட்ட முடியவில்லை.
'கரணம் தப்பினால் மரணம்' என்று கேள்விப்பட்டிருப்போம், கமலுக்காக அதை பிரத்யோகமாக மாற்றினால், கனவு தப்பினால் மரணம் என்று கூட மாற்றலாம். அப்படி அவரது பல கனவுகளைக் அவரது கண் முன்னே கொன்று வீசியவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்தான் எனலாம். காலம் கடந்து கொண்டாடப்படும் பல படங்களும் வெளியான காலகட்டத்தில் படு தோல்வியைத் தழுவிய படங்களாக மாறின, மாற்றப்பட்டன. குணா, அன்பே சிவம் என இந்த வரிசை நீளும். இவற்றில் இருந்து எல்லாம் மீண்டதால் தான் அவர் சினிமா விவசாயி.

பிக் பாஸ்: சினிமாவில் பல அவதாரங்களை மட்டும் இல்லாமல் சகலகலா வல்லவனாகவும் திகழ்ந்த கமல்ஹாசன், சின்னத்திரையில் காலடி எடுத்து வைப்பார் என்று யாரும் நினைக்கவில்லை. அப்படி காலடி எடுத்து வைத்த நிகழ்ச்சிதான் பிக் பாஸ். பிக் பாஸ் நிகழ்ச்சி மீது பலருக்கும் பெரிய ஈர்ப்பு ஏற்பட முக்கிய காரணமே கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பதுதான். வீக் எண்ட் வந்தாலே மற்ற நாட்களைக் காட்டிலும் டி.ஆர்.பி எகிறிக் கொண்டு இருந்தது. 7 ஆண்டுகள் அதாவது 7 சீசன்கள் தொகுத்து வழங்கிய பின்னர் அதிலிருந்து விலகினார் கமல்.
மிஸ் யூ கமல் சார்: அவர் விலகியதால் ரசிகர்கள் அனைவருக்கும் எழுந்த கேள்வி, பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து தொகுத்து வழங்கக் கூடியவர் யார் என்ற கேள்விதான். அந்த கேள்விக்கு பதிலாக வந்தவர்தான் விஜய் சேதுபதி. 8வது சீசனை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியின் ஸ்டைல், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. சிலர் கமல்ஹாசன் போல சுற்றி வளைத்து பேசாமல், நேரடியாகவே விஜய் சேதுபதி பேசுகிறார் என்று எல்லாம் பலரும் பாராட்டினார்கள். ஆனால் இந்த சீசனில் அதாவது 9வது சீசனில் விஜய் சேதுபதியின் நிலையைப் பார்த்தால் மிகவும் பாவமாக இருக்கிறது.

போராடும் விஜய் சேதுபதி: அவரும் பிக்பாஸ் குழுவும் இணைந்து இந்த சீசனை எப்படியாவது நல்ல சீசன் என்று பெயர் வாங்க வைத்துவிடவேண்டும் என, பல முயற்சிகளை எடுக்கிறார்கள். ஆனால் போட்டியாளர்களோ பிக்பாஸ் சொல்வதையோ, விஜய் சேதுபதி சொல்வதையோ கொஞ்சம் கூட மதிக்காமல், வீக் எண்ட் எபிசோட்களுக்காக டிரஸ்தான் மாறுகிறதே தவிர முன்னேற்றம் சுத்தமாக இல்லை. சில போட்டியாளர்கள் ஆட்டத்தை சுவாரஸ்ய படுத்த முயற்சித்தால் சிலர், "என்னைத் தாண்டி சுவாரஸ்யப்படுத்து" என்பது போல குடைச்சல் கொடுத்து வருகிறார்கள். இப்படியான போட்டியாளர்களை போட்டு வதக்கி எடுக்க கமல்ஹாசன் இல்லையே என்று ஏங்கும் ரசிகர்கள் ஏராளம். இதில் கணிசமான ரசிகர்களின் மனநிலை, "மிஸ் யூ கமல் சார், நீங்க இல்லாத பிக்பாஸ் ரொம்பவும் டல் அடிக்குது. பாவம் விஜய் சேதுபதி வந்து மாட்டிக்கிட்டாரு" என்றும் பேசி வருகிறார்கள். இன்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பிறந்தநாள் வாழ்த்துகள் ஆண்டவரே!


Click it and Unblock the Notifications











