Kamalhaasan: கோபத்தில் கமல்ஹாசன்.. அவருக்கே தெரியாமல் நடந்த சம்பவம்.. இப்படி ஆகிப்போச்சே!
சென்னை: நடிகர் கமல்ஹாசன், தனது பெயர், புகைப்படம், குரல், மற்றும் "உலகநாயகன்" என்ற பட்டத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்தத் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போதும் எதிர்காலத்திலும் தனது அடையாளச் சின்னங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட கூடாது என்பதே அவரது முக்கிய கோரிக்கையாக உள்ள நிலையில் அவரது இந்த வழக்கு நாளை அதாவது ஜனவரி 12ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்தியத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 60 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடகர் உள்ளிட்ட பல துறைகளில் முத்திரை பதித்தவர் கமல்ஹாசன். கடின உழைப்பால் ஈட்டிய புகழையும், தனி அடையாளத்தையும் பாதுகாக்கவே அவர் இந்தச் சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளார். தன் அனுமதியின்றி புகைப்படம், பெயர், குரல் அல்லது "உலகநாயகன்" பட்டத்தை வணிகப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என கமல்ஹாசன் மனுவில் வலியுறுத்தியுள்ளார். தன் புகழையும் அடையாளத்தையும் சிலர் தவறாகப் பயன்படுத்துவது, தனது நற்பெயருக்கும் ரசிகர்களின் நம்பிக்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சென்னையை சேர்ந்த 'நீயே விடை' நிறுவனம், அவரது ஒப்புதலின்றி கமல்ஹாசனின் புகைப்படம், திரைப்பட வசனங்கள் அச்சிடப்பட்ட டி-சர்ட்டுகளை விற்பனை செய்கிறது. இத்தகைய வணிக நடவடிக்கைகள் தன்னை ஒரு பண்டமாக மாற்றுவதாகவும், இதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உருவம் அல்லது குரல் பயன்பாட்டிற்கு சட்டப்பூர்வ அனுமதி அவசியம் என்பதால் கமல்ஹாசனுக்கு ஆதரவாக இந்த வழக்கில் தீர்ப்பு வரும் என்ற பேச்சுக்கள் இப்போதே எழ தொடங்கிவிட்டது.
ஒரே தடை: இந்த வழக்கு ஒரு நிறுவனத்துக்கானது மட்டுமல்ல. எதிர்காலத்தில் யார் தனது அடையாளம், பெயர், புகைப்படம், 'உலகநாயகன்' பட்டத்தை வணிக நோக்கில் தவறாகப் பயன்படுத்தினாலும் அவர்களுக்கும் தடை பொருந்த வேண்டும். இதற்காக நீதிமன்றம் பொதுவான தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்கள் பெருகிய இக்காலகட்டத்தில், பிரபலங்களின் படங்கள், பெயர்கள் அனுமதியின்றி வணிகரீதியாக பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக ஏ.ஐ தொழில்நுட்பம் வேகமாக ஆக்கிரமித்து வரும் நிலையில் பிரபலங்கள் தொடர்பான அனைத்தும் வணிகப் பொருளாக மாறியுள்ளது.
இளையராஜா: ஏற்கனவே தமிழ் சினிமா பிரபலங்களில் இசைஞானி இளையராஜா தனது பாடல்கள் தொடங்கி தனது புகைப்படங்கள் வரை வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது என்றும் உரிமம் பெற்றே பயன்படுத்த வேண்டும் என்றும் வழக்கு தொடுத்து தடை உத்தரவு பெற்றுள்ளார். பாலிவுட்டில் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் நடிகர் அபிஷேக் பச்சன் தங்கள் அடையாள உரிமைகளைப் பாதுகாக்க இதே போன்ற வழக்குகளை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து, தடை உத்தரவுகளைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











