அய்யய்யோ இது என்ன புது பஞ்சாயத்து.. கமல் ஹாசனுக்கு ரெட் கார்டா?.. திரையுலகில் பரபரப்பு
சென்னை: தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் லிங்குசாமி. இவர் தனது சகோதரர்களுடன் சேர்ந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்திவருகிறார். பல தரமான படங்களை தயாரித்த அந்த நிறுவனம் தயாரித்த படம்தான் கமல் ஹாசன் நடித்த உத்தம வில்லன். படம் படுதோல்வியை சந்தித்தது. சூழல் இப்படி இருக்க கமல் ஹாசன் மீது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தது. இந்தச் சூழலில் கமல் ஹாசனுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என ஒருதரப்பினர் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
கமல் ஹாசன் கலையில் ஏதாவதொரு புது விதத்தை புகுத்த வேண்டும் என்பதுதான் முதல் எண்ணமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட ஒரு படம்தான் உத்தமவில்லன். கமல் ஹாசன் கதை எழுத; அவரது நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த இயக்க; ஆண்ட்ரியா, ஊர்வசி, கே.பாலசந்தர், எம்.எஸ்.பாஸ்கர், பூஜா குமார் உள்ளிட்ட பலர் நடிக்க 2015ஆம் ஆண்டு வெளியானது அந்தப் படம். படத்தை இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்கள் இணைந்து நடத்தும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது. கண்டிப்பாக இந்தப் படம் தங்களது பேனருக்கு லாபத்தை மட்டும் ஈட்டிக்கொடுக்காமல் நல்ல பெயரையும் சம்பாதித்துக்கொடுக்கும் என்று லிங்கு அண்ட் பிரதர்ஸ் நினைத்தார்கள்.

அட்டர் ஃப்ளாப்: ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக நடந்தது. படம் விமர்சன ரீதியாக இப்போது கொண்டாடப்பட்டாலும்; படம் ரிலீஸானபோது கொண்டாடப்படவில்லை. முக்கியமாக படம் வணிக ரீதியாக கடுமையான அடி வாங்கியது. இதன் காரணமாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சொல்ல முடியாத நிதி நெருக்கடியில் சிக்கியதாக திரைத்துறையில் இப்போதும் ஒரு பேச்சு உண்டு. அந்த வருத்தத்தை லிங்குசாமியும் சில பேட்டிகளில் பகிர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல் கொடுத்த வாக்குறுதி: லிங்குசாமி சில வாரங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியில்கூட, வேறு கதை செய்யலாம் என்பதுதான் எங்களது நோக்கமாக இருந்தது. ஆனால் கமல் ஹாசன் இந்தக் கதையை படமாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக தெரிவித்திருந்தார். இதற்கிடையே படம் படுதோல்வியை சந்தித்ததன் காரணமாக, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வேறு ஒரு படம் செய்து தருவதாக கமல் ஹாசன் வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால் இடையில் சில காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்து; இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
கமல் மீது புகார்: இருந்தாலும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு இதுவரை கமல் ஹாசன் சொன்னபடி படம் நடித்துத்தரவில்லை. இதனையடுத்து அவர் மீது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறது. அந்தப் புகாரில், " எங்களுக்கு விருப்பமில்லாத உத்தமவில்லன் திரைப்பட கதையில் நடித்து அது மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்துவிட்டது. அதற்கு பதில் புதிய படத்தில் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடித்துத் தருவதாக கமல் ஹாசன் உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால் இன்னும் படம் நடிக்கவில்லை" என்று குறிப்பிட்டிருந்தது.
செலவுகளை தொடர்ந்து இழுத்துவிட்ட தங்கமயில் குடும்பத்தினர்.. 3 மடங்கு செலவு செய்த பாண்டியன்!
கமலுக்கு ரெட் கார்டு: இந்நிலையில் இந்த விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதாவது 9 வருடங்கள் ஆகியும் கமல் ஹாசன் லிங்குசாமியின் நிறுவனத்துகு படம் நடித்துக்கொடுக்காமல் ஏமாற்றிவருகிறார். எனவே அவருக்கு ரெட் கார்டு விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் ஒருதரப்பினர் வலியுறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி கமல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கிடையே சிம்பு தக் லைஃப் படத்தில் நடிக்கக்கூடாது என்று இன்று பிற்பகல் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











