பேரன்பை பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன்.. இயக்குநர் ரங்கராஜன் மறைவு.. கலங்கிப் போன கமல்
சென்னை: பிரபல இயக்குநர் ஜி.என். ரங்கராஜன் மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் கல்யாண ராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், மகராசன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஜி.என். ரங்கராஜன்.
தனது கடிதத்தில் பேரன்பை பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன் என கலங்கிப் போய் குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.

ஜி.என்.ஆர் மறைவு
சினிமா உலகில் ஜி.என்.ஆர் என பிரபலமாக அறியப்பட்ட பழம்பெரும் இயக்குநர் ஜி.என். ரங்கராஜன் இன்று உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90. ஜி.என்.ஆர் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அண்ணனை இழந்துவிட்டேன்
"நிபந்தனையற்ற தூய பேரன்பினைப் பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன். இயக்குனர் ஜி.என்.ரங்கராஜனுக்கு அஞ்சலி." என நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது இரங்கல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசனின் இரங்கல் கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மாறாத பிரியம் கொண்டவர்
"நான் சினிமாவில் நுழைந்த காலம் தொட்டு இறக்கும் தருவாய் வரை என் மீது மாறாத பிரியம் கொண்டவர் இயக்குநர் ஜி.என். ரங்கராஜன். கடுமையான உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனித்த இடத்தை உருவாக்கிக் கொண்டார். இன்றும் விரும்பிப் பார்க்கப்படும் பல திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு தந்தார். அவரது நீட்சியாக மகன் ஜி.என்.ஆர். குமரவேலனும் சினிமாவில் தொடர்கிறார்" என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கமல் இல்லம்
கல்யாண ராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், எல்லாம் இன்பமயம், மகாராசன் என என்னை வைத்து பல வெற்றிப் படங்களைத் தந்தவர். என் மீது கொண்ட மாறாத அன்பால், தான் கட்டிய வீட்டிற்கு 'கமல் இல்லம்' என்று பெயர் வைத்தார். இன்று அந்த வீட்டிற்கு சற்றேறக்குறைய 30 வயதாகி இருக்கக் கூடும் என்றும் கமல் குறிப்பிட்டுள்ளார்.

ஆழ்வார்ப்பேட்டையில்
ஜி.என்.ஆர் வீட்டில் இல்லை என்றால் ஆழ்வார்ப்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில்தான் இருப்பார் என்றே எங்களை அறிந்தவர்கள் சொல்வார்கள். சினிமாவில் மட்டுமல்ல, மக்கள் பணியிலும் என்னை வாழ்த்தியவர். எப்போதும் எங்கும் என் தரப்பாகவே இருந்தவர் என்றும் புகழஞ்சலி சூட்டி உள்ளார்.

அண்ணி ஜக்குபாய்க்கு
"நிபந்தனையற்ற தூய பேரன்பினைப் பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன். அண்ணி ஜக்குபாய்க்கும், தம்பி இயக்குநர் ஜி.என்.ஆர் குமரவேலனுக்கும் குடும்பத்தார்க்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கமல் கலங்கிய மனதோடு இந்த இரங்கல் கடிதத்தை எழுதியுள்ளார்.


Click it and Unblock the Notifications











