வானம் போல வாழ்ந்து மறைந்தவர் கிரேஸி மோகன்.. இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் நினைத்து உருகிய கமல்!
சென்னை: நகைச்சுவை நாயகன் கிரேஸி மோகனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உருக்கமான பதிவை உலகநாயகன் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, வசூல் ராஜா என ஏகப்பட்ட கமல் படங்களுக்கு வசனம் எழுதியவர் கிரேஸி மோகன்.
கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி கிரேஸி மோகன் உயிரிழந்தபோது ஒட்டுமொத்த சினிமா உலகமும் சிரிப்பு உலகமும் சோகத்தில் மூழ்கியது.

கிரேஸி மோகன் நினைவு தினம்
1952ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பிறந்த மோகன் ரங்காச்சாரி சினிமா உலகில் கிரேஸி மோகனாக பிரபலமானார். சினிமாவை தாண்டி நாடக உலகில் தன்னை முழுமையாக கடைசி வரை ஈடுபடுத்திக் கொண்டு வந்த கிரேஸி மோகன் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் தேதி காலமானார். இன்று இரண்டாம் ஆண்டு நினைவு தினம்.

கமலும் கிரேஸியும்
கலைமாமணி விருது பெற்ற கிரேஸி மோகன் உலக நாயகன் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், இந்திரன் சந்திரன், மகளிர் மட்டும், சதி லீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்சதந்திரம், பம்மக் கே சம்மந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் மற்றும் மன்மதன் அம்பு படம் வரை இணைந்து பணியாற்றி உள்ளார்.

வானம் போல்
"நாடகமே உலகம் என்கிற ஞானச்சொல்லை, நகைச்சுவை நாடகமே உலகம் என்று மாற்றியவர். சிரிப்பு முகமூடிக்குள் தீவிர மரபிலக்கிய முகத்தோடு வானம் போல் வாழ்ந்து மறைந்தவர் கிரேஸி மோகன். இரண்டாம் நினைவு நாளில் அவரை நினைவு கூர்கிறேன்." என கமல் கிரேஸியை நினைத்து உருகியுள்ளார்.

கிரேஸியின் ரசிகர்
கமல்ஹாசனும் கிரேஸி மோகனும் இணைந்து பணியாற்றிய படங்களின் புகைப்படங்கள் உடன் கிரேஸியின் புகைப்படத்தை எடிட் செய்து ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகார ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், கிரேஸியின் எழுத்துகளுக்கு முதல் ரசிகராக கமல்ஹாசன் இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











