ஒருவரையொருவர் திட்டிக்காதீங்க.. திரைத்துறையினருக்கு கமல் ஹாசன் வைத்த வேண்டுகோள்
சென்னை: நடிகர் கமல் ஹாசன் இந்தியாவில் அனைவராலும் அறியப்பட்டவர். சிவாஜிக்கு அடுத்ததாக நடிப்பு பல்கலைக்கழகம் என்று புகழப்படுபவர் அவர். நடிப்பு, நடனம், கதை, திரைக்கதை, பாடல்கள் என அனைத்திலும் புகுந்து விளையாடக்கூடிய அவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துவருகிறார். அவர் நடிப்பில் இந்தியன் 2 படமும் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் தன்னுடைய திரைத்துறையினருக்கு கமல் ஹாசன் ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார்.
கமல் ஹாசன் இந்திய சினிமாவின் பல்கலைக்கழகம் என்று புகழப்படுபவர். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஏதாவதொரு சோதனை முயற்சியை செய்து பார்ப்பவர். அது சில நேரங்களில் சக்சஸ் ஆகும்; சில நேரங்களில் ஃபெயிலியர் ஆகும். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கமல் தனது தலையில் ஏற்றிக்கொள்வதில்லை. அவரைப் பொறுத்தவரை கலையில் ஏதாவதொரு புது விதத்தை புகுத்த வேண்டும் என்பதுதான் முதல் எண்ணமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரீ என்ட்ரி: அப்படிப்பட்ட கமல் ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலுக்கு சென்றார். ஆனால் அங்கு அவர் எதிர்பார்த்தபடி சூழல் சாதகமாக அமையவில்லை. அதனையடுத்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் விக்ரம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். படம் மெகா ஹிட்டானது. முக்கியமாக வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது. இதனால் தமிழ் சினிமாவுக்கே புத்துணர்ச்சி பிறந்ததாக திரைத்துறையில் ஒருதரப்பினர் சொல்வதுண்டு.
அடுத்த படங்கள்: கமல் ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் இப்போது நடித்துவருகிறார். நாயகன் படத்துக்கு பிறகு மீண்டும் இவர்கள் இணைந்திருப்பதால் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தப் படத்தை முடித்துவிட்டு சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல் ஹாசன். நடிப்பு மட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன், சிம்பு நடிக்கும் எஸ்டிஆர் 48 ஆகிய படங்களை தயாரிக்கவும் செய்கிறார் கமல்.
கமல் பேச்சு: இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிறுவனர் டி.இராமானுஜத்தின் நூற்றாண்டு விழா மயிலாப்பூரில் இருக்கும் ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் கலந்துகொண்டார். அதில் கமல் ஹாசன், பாக்யராஜ், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோர் கலந்துகொண்டார். அப்போது பேசிய கமல், “இது ஒரு குடும்ப விழா. என்னை அழைத்திருக்காவிட்டாலும் நான் வந்திருப்பேன். நமது குடும்பம் மிக மிக சிறியது.
திட்டிக்காதீங்க: இந்த குடும்பத்துக்குள் பல விவாதங்கல் வரும், சிக்கல்கள் வரும், எதிரும் புதிருமாக பேச வேண்டியிருக்கும். அதற்காக ஒருவரையொருவர் திட்டிக்கொள்ள வேண்டும் என்பது இல்லை. டி.இராமானுஜத்தை திரையுலகின் தந்தை என்று சொல்வது பொருத்தமானது. இவருக்கு விழா எடுக்க வேண்டும் என்று யாருக்கெல்லாம் தோன்றியதோ அவர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.


Click it and Unblock the Notifications











