பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ரசிகர்களை உச்சி குளிரவைத்த முதலமைச்சர்.. நன்றி சொன்ன கமல்ஹாசன் - விபரம்
சென்னை: தமிழ் சினிமாவின் அடையாளமாக தான் இருக்கும்போதும் விளங்கியவர், மறைந்த பின்னரும் விளங்கிக் கொண்டு இருப்பவர் என்றால் அது பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தைக் குறிப்பிடலாம். இவர் கடந்த 2020 ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி கொரோனாவில் உயிரிழந்தார். இவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன்னும் சொல்லப்போனால், அவரது மறைவால் தமிழ்நாடே துக்க வீடுபோல் காணப்பட்டது. எங்கு திரும்பினாலும் எஸ்.பி.பி குறித்த பேச்சுகளும் கண்ணீருமாகத்தான் இருந்தது. இந்நிலையில், அவர் மறைந்த நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் அவர் வசித்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் மகனும் பாடகருமான சரண் தனது தந்தையின் நினைவு நாளையொட்டி, தனது தந்தையின் வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரைச் சூட்டவேண்டும் என தலைமைச் செயலகத்தில் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தார். அந்த மனுவில், "மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகரின் முதன்மை சாலைக்கு 'எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை' என பெயர் சூட்டி அவரது நினைவைப் போற்றவேண்டும்" என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த மனுவை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரைச் சந்தித்து, சரண் வழங்கினார்.

அவர் கோரிக்கை வைத்த 36 மணி நேரத்தில், தமிழ்நாடு அரசு நுங்கம் பாக்கம் காம்தார் நகரின் முதன்மை சாலைக்கு 'எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை' என பெயர் சூட்டப்படுவதாக அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்பில், "பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு, பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பல்துறை வித்தகராக விளங்கியவரும், ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவரும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்பிற்குரியவருமான திரு.எஸ்.பியாலசுப்பிரமணியம் அவர்கள். கடந்த 25-9-2020 அன்று இதே நாளன்று நம்மை விட்டுப் பிரிந்தார். காலம் அவரைப் பிரித்தாலும், நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் அவர்.
முதலமைச்சர் அறிவிப்பு: அன்னார் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு "எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயரிடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்" என்ற அறிவிப்பு வெளியானது.

மு.க. ஸ்டாலின்: மேலும் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது, தனிப்பட்ட எக்ஸ் பக்கத்தில், " பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களது நினைவு நாளில், அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயரிடப்படும் எனும் அறிவிப்பைச் செய்வதில் பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.

கமல்: இந்நிலையில் முதலமைச்சருக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன், தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், " ஒப்பற்ற இசைக் கலைஞரும் எனது மூத்த சகோதரருமான #SPBalasubrahmanyam அவர்களின் பெயரை, சென்னையில் அவர் வாழ்ந்த தெருவிற்குச் சூட்டி அறிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் லட்சக்கணக்கான கலை ஆர்வலர்களின் மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்குச் செய்யப்பட்டு இருக்கும் மரியாதை இது. பாலு அண்ணாவின் ரசிகர் கூட்டத்தில் ஒருவனாக என் பாராட்டுகளும் நன்றியறிதல்களும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு உரித்தாகட்டும்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் எஸ்.பி.பி. சரண் இது தொடர்பாக கூறுகையில், நான் கோரிக்கை வைத்த 36 மணி நேரத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சர் ஸ்டாலுனுக்கும் நன்றிகள் என பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











