இல்லத்தரசிகளுக்கும் சம்பளம்.. புருஷன் தரலைன்னாலும் அரசு தரணும்.. ஆட்சிக்கு வந்தா கமல் செய்வாரோ?
சென்னை: வீட்டில் குடும்பத்தை கட்டிக் காப்பாற்றும் பெண்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உரிய மரியாதையை கணவன் தரவில்லை என்றாலும், அரசு தர வேண்டும் என்றும், இது முடியும் என்றும் கமல் கூறி உள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.
Recommended Video
வார வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நல்ல புத்தகத்தை தனது ரசிகர்களுக்கு பரிந்துரை செய்து வருகிறார் கமல்ஹாசன்.
இந்த வாரம் தொழில்முனைவோர் பற்றி பேசும் தொடுவானம் தேடி புத்தகத்தை பரிந்துரைத்து இந்த உரையை கமல் ஆற்றினார்.

ஹோம் மேக்கர்களுக்கு சம்பளம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது அரசியல் கருத்துக்களையும், சமூக அக்கறையையும், அறிவுசார் தேடல்களையும் கமல்ஹாசன் தமிழக மக்களுக்கு சொல்லி வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில், வேலைக்கு செல்லாமல் வீட்டை கவனித்துக் கொள்ளும் பெண்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது குறித்து அதிரடியாக பேசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் கமல்.

சாத்தியாமான்னு சிரிப்பாங்க
இது எப்படி சாத்தியம், அம்மாவுக்கும், மனைவிக்கும் எப்படி சம்பளம் தருவதுன்னு சிரிப்பாங்க, ஆனால், இது முடியும். நடக்க வேண்டிய விஷயம். காலையில் இருந்து ராத்திரி முழுக்க வேலை செய்யும் பெண்களால் தான் நாட்டின் ஜிடிபி பொருளாதார வளர்ச்சியே நடக்கிறது. அந்த நிலையில், அதற்கு உறுதுணையாக இருக்கும் பெண்களுக்கு அதற்கான மரியாதை செலுத்துவதில் என்ன தப்பு என்றார்.

தொடுவானம் தேடி
சமீபத்தில் கமல்ஹாசன் வெளியிட்ட தொழில்முனைவோருக்கான புத்தகம் தான் ‘தொடுவானம் தேடி' அந்த புத்தகத்தை பற்றி நேற்றைய நிகழ்ச்சியில் கமல் பேசினார். பெண்கள் எழுச்சி பெற வேண்டும் என்றும், அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பது குறித்தும் அந்த புத்தகம் விளக்குகிறது என்றார்.

ஆணாதிக்க சதி அல்ல
பெண்களை ஒட்டுமொத்தமாக வீட்டிலேயே இருக்க வைக்க வேண்டும் என்கிற ஆணாதிக்க சதி அல்ல இது என்று தனது பேச்சை தப்பாக விமர்சிக்கக் கூடும் என்கிற எச்சரிக்கையில் விளக்கம் அளித்த கமல், விருப்பத்தின் பேரில், வீட்டில் இருக்கும், வீட்டை கட்டிக் காக்கும் பெண்களுக்கும் நாம் சம்பளம் தர வேண்டியது நமது கடமை என்றார்.

கவிதை சொன்ன கமல்
மேலும், இது தொடர்பாக கவிதை ஒன்றையும் கமல் சொல்லி ஒட்டுமொத்த பெண்களின் மனங்களையும் கொள்ளையடித்துள்ளார். "நலிந்தோருக்கு நாளும் கிழமையும் இல்லை.. பெண்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் இல்லை" என்று எங்கோ படித்ததாக நியாபகம் என்ற கமல், அப்படி லீவ் இல்லாமல் வேலை பார்க்கும் இல்லத்தரசிகளை கவனிக்க வேண்டியது நம் கட்டாயக் கடமை என்றார்.

ஆட்சி கிடைத்தால்
எப்படி பேசினாலும், விமர்சனங்கள் வரத்தான் செய்யும். கமல் சொல்வது போல, வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் ஊதியம் கொடுக்க வேண்டும் என்றால், அவர் ஆட்சிக்கு வந்தால் கொடுக்கப்படும் என்கிற கொள்கை முடிவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் மறைமுகமாக திணிக்கிறார் கமல் என்றும், தாய்மார்களின் ஓட்டுக்களை பெறவே இந்த பிரசாரம் என்றும் கிண்டல் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











