எஸ்.பி.பி., பிறந்த நாளுக்கு தாமதமாக வாழ்த்து சொன்ன கமல்; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
சென்னை: எண்பதுகளில் இருந்து தான் மறையும் வரை தமிழ் சினிமாவில் கொடிகட்டிப்பறந்த பாடகர் என்றால் அது எஸ்.பி. பாலசுப்ரமணியம்தான். ரஜினி, கமல், சரத்குமார், சத்யராஜ், கார்த்திக், அஜித், விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட மாஸ் கதாநாயகர்களுக்கு ஓப்பனிங் சாங் என்றால் இசையமைப்பாளர்களின் முதல் தேர்வு எஸ்.பி.பி-யாகத்தான் இருப்பார். மாஸ் ஹீரோக்களுக்கான ஓப்பனிங் சாங் மட்டும் இல்லாமல், முரளி, ராமராஜன், மோகன் உள்ளிட்ட கிராமப்பாங்கான கதைகளில் அதிகம் நடித்து மக்கள் மனதில் இடம்பெற்ற கதாநாயகர்களின் படங்களிலும் எஸ்.பி.பி.-இன் குரலில் பாடல்கள் இடம்பெற்றுவிடும். தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா வட இந்திய சினிமா என அனைத்திலும் கோலோச்சிய பாடகர் என்றால் அது எஸ்.பி.பி., தான்.
கொடிகட்டிப் பறந்த எஸ்.பி.பி.: திரைமொழியின் நவரசங்களையும் தனது குரலால் அலங்கரித்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 16 இந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியா உட்பட உலகத்தின் பெரும் பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இப்படியான நிலையில், கொரோனா தொற்று பாதிப்பினால், 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி சிகிச்சை பலன் அளிக்காமல் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு இசை ரசிகர்களால் கூட தகுந்த இறுதி மரியாதை அளிக்கப்படமுடியவில்லை என்ற ஏக்கம் இன்றைக்கும் பலரை வாட்டிக்கொண்டு உள்ளது எனலாம். எஸ்.பி.பி கடந்த 1946ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி பிறந்தார். எஸ்.பி.பி., உயிருடன் இருந்திருந்தால் நேற்றைக்கு 78வது பிறந்த நாளைக் கொண்டாடியிருப்பார்.

கமல் ஹாசனின் எக்ஸ் போஸ்ட்: இதனைக் குறிப்பிடும் வகையில், நடிகரும் எஸ்.பி.பி-இன் நெருங்கிய நண்பருமான கமல் ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில்," அன்னய்யா எஸ்பிபிகாரு இருந்திருந்தால் இன்று எழுபத்தெட்டாம் பிறந்த நாளைக் கொண்டாடிக்கொண்டிருப்போம். இப்படிச் சொல்வதால் அவர் இன்று இல்லை எனலாகாது. நாதசரீரா என்னும் சொல்லுக்கு இணங்க பாடலே வாழ்வாகப் பாடிப்பறந்த என் அருமை அண்ணனின் பிறந்த நாளில் அவரது நினைவுகளைப் போற்றுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். கமல் ஹாசனின் இந்த பதிவுக்கு எஸ்.பி.பி-யின் ரசிகர்கள் லைக்குகளை தட்டி விடுவதுடன், கமெண்டுகளையும் வாரிக்குவித்து வருகின்றனர். சிலர் இவ்வளவு காலதாமதமாக வாழ்த்துவதற்கு நீங்க வாழ்த்தாமலே இருக்கலாம் கமல் சார் போன்ற கமெண்டுகளையும் பார்க்க முடிகின்றது.

அதேபோல் இசைஞானி இளையராஜா நேற்று, தனது எக்ஸ் பக்கத்தில் மறைந்த பாடகரும் தனது நெருங்கிய நண்பருமான எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை நினைத்து பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், "என்றும் என் நினைவில் பாலு... miss you" என பதிவிட்டிருந்தார். இது இளையராஜா ரசிகர்கள் மத்தியிலும் எஸ்.பி.பி., ரசிகர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கமல் மற்றும் இளையராஜாவின் அடுத்த படங்கள்: கமல் ஹாசன் தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகின்றார். இவரது நடிப்பில் தற்போது ரிலீசாக தயாராக உள்ள படம் என்றால் அது, ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் - 2 திரைப்படம். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இப்படம் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. இளையராஜாவின் இசையில் வெளியாகவுள்ள படங்களில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள் என்றால் அது, விடுதலை பாகம் 2 மற்றும் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் இளையராஜாவின் பயோபிக் படம் தான்.


Click it and Unblock the Notifications











