தக் லைஃப் பட்ஜெட் இத்தனை கோடியா?.. கர்நாடகாவில் ரிலீஸாக தடை.. என்ன செய்யப்போகிறார் கமல்ஹாசன்?
சென்னை: கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க ஏன் மறுக்கிறார் என்றும் ஒரு பெருங்கூட்டத்தின் நம்பிக்கையை சிதைக்கும் விஷயத்தை அவர் எப்படி செய்யலாம் என்றும் நிலம், நீர், மொழி உணர்வு தான் மக்களுக்கு அதிகம் இருக்கும், அந்த விவகாரத்தில் கமல்ஹாசன் அப்படியொரு பேச்சை பேசி விட்டு, அதற்கு மன்னிப்புக் கூட கேட்கமாட்டேன் என இருப்பது ஏன்? ராஜகோபாலாச்சாரியே இதே போல 75 ஆண்டுகளுக்கு முன்னர் பேசி, அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளாரே என கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாக பிரசன்னா கேள்வி மேல் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், தக் லைஃப் படத்தின் பட்ஜெட் குறித்தும் வெளிப்படையாக தெரிவித்த அவர், அத்தனை கோடி போட்டு எடுக்கப்பட்ட படத்தின் பிசினஸ் பாதிக்கும் என நினைத்தால், அதற்கு மன்னிப்பு கேட்டு விடலாமே என்றும் அதில், என்ன பிரச்னை உள்ளது என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

மேலும், ராஜ்கமல் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஒரு வார கால அவகாசம் வேண்டும் என கேட்ட நிலையில், வரும் ஜூன் 10ம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தக் லைஃப் ரிலீசுக்கு சிக்கல்: திட்டமிட்டபடி வரும் ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் தக் லைஃப் திரைப்படம் வெளியாகும் நிலையில், கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் உருவாகி உள்ளது. தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என கமல்ஹாசன் தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. கன்னட ஃபிலிம் சேம்பர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் படத்தை வெளியிட மாட்டோம் என அறிவித்துள்ளனர். அதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், கமல்ஹாசன் ஏன் இப்படியொரு சர்ச்சையை கிளப்பினார் என நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கமல்ஹாசன் வரலாற்று ஆய்வாளரா?: மன்னிப்பு கேட்டால் இந்த பிரச்னையை சரிசெய்துக் கொள்கிறோம் என கர்நாடகா ஃபிலிம் சேம்பர்ஸ் சொல்கிறது. அதை கருத்தில் கொண்டு மன்னிப்புக் கேட்டு விட்டால் படத்தை வெளியிட எந்தவொரு தடையும் இருக்காது. அதை விட்டு விட்டு கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க முடியாது என மறுக்க காரணம் என்ன? முதலில் அவர் என்ன வரலாற்று ஆசிரியரா? அல்லது மொழியியல் வல்லுநரா? தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என எப்படி சொல்லலாம் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தக் லைஃப் பட்ஜெட்: தயாரிப்பு நிறுவனம் சார்பாக கொடுக்கப்பட்டிருந்த மனுவில் 300 கோடி பட்ஜெட்டில் தக் லைஃப் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, இத்தனை கோடி போட்டு படம் எடுத்து, அதன் ரிலீஸுக்கு சிக்கல் உள்ளது, அதற்காக கோர்ட் படியை நாடியிருக்கின்றனர். ஆனால், இதற்கு முழு முதற் காரணம் யாரென்றால், படத்தின் தயரிப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன் தான் எனக் கூறிவிட்டார்.
கமலின் முடிவு என்ன? ஜூன் 5ம் தேதி கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகாது என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது. கமல்ஹாசன் திட்டவட்டமாக தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என நீதிமன்றத்தை நாடினார். ஆனால், நீதிபதியே, மன்னிப்பு கேட்டால் பிரச்னை சரியாகி விடுமே என பேசும் போது, கமல்ஹாசன் தொடர்ந்து மன்னிப்பு கேட்காமல், கர்நாடகாவில் படம் வெளியாகவில்லை என்றாலும் பரவாயில்லை என முடிவெடுப்பாரா? அல்லது 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படத்துக்கு வசூல் மற்றும் லாபம் பாதிக்குமே என நினைத்து மன்னிப்பு கேட்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கமல்ஹாசன் படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை என்றால், இனி வரும் காலங்களில் கன்னட படங்களுக்கு தமிழ்நாட்டிலும் கடும் எதிர்ப்பு உருவாகும் என சமூக வலைதளங்களில் கமல்ஹாசன் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











