Kamal: விக்ரம் கோஸ்ட் வரிசையில் KGF மான்ஸ்டர்... கமல் -பிரசாந்த் நீல் கூட்டணியில் மெகா சம்பவம்..?
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், கமல்ஹாசனின் புதிய கூட்டணி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கமல் - பிரசாந்த் நீல் கூட்டணியில் பிரம்மாண்டம்
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது சினிமா, அரசியல், பிக் பாஸ் என படு பிஸியாக வலம் வருகிறார். முக்கியமாக கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் கமலுக்கு வெறித்தனமான கம்பேக் கொடுத்தது. எந்த இயக்குநருடன் இணைந்தாலும் மேக்கிங், ஸ்க்ரிப்ட்டில் கமல் தலையீடுவார் என சொல்லப்படுவதுண்டு. ஆனால் விக்ரம் படத்தில் லோகேஷ் சொல்வதை மட்டும் கேட்டு நடித்துக் கொடுத்தார்.

அதன் பலனாக விக்ரம் படம் மூலமாக பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி ரூபாய் வசூலை வாரி சுருட்டிக் கொண்டார். இதனையடுத்து மீண்டும் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் பட தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இன்னொரு பக்கம் பிரபாஸுடன் கல்கி, ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படங்கள் என நடிப்பிலும் பிஸியாகிவிட்டார். இந்தியன் 2, கல்கி படங்களைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடிக்கவுள்ளார்.
அதேநேரம் கமல் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கவிருந்த KH 233 படம் ட்ராப் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கமல்ஹாசனுடன் இயக்குநர் பிரசாந்த் நீல் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேஜிஎஃப் படம் மூலம் இந்தியளவில் பிரபலமான பிரசாந்த் நீல், தற்போது சலார் படத்தை இயக்கியுள்ளார். பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள சலார், நாளை வெளியாகிறது.
கேஜிஎஃப் போலவே சலாரும் பக்கா ஆக்ஷன் ஜானர் மூவியாக இருக்கும் எனத் தெரிகிறது. ஆக்ஷன், சினிமோட்டோகிராபி, மேக்கிங் என அனைத்தும் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விட்டுள்ளன. மேலும் இது சலார் முதல் பாகம் தான் என்றும், விரைவில் இரண்டாம் பாகம் உருவாகும் எனவும் தெரிகிறது. சலார் வெளியானதும் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல். இதுவும் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாம்.
கன்னடத்தில் இருந்து டோலிவுட் சென்ற பிரசாந்த் நீல், அடுத்து கோலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கவுள்ளாராம். அதற்கு கமல்ஹாசன் தான் காரணம் என சொல்லப்படுகிறது. விக்ரம் படத்தில் கோஸ்ட்-ஆக மாஸ் காட்டிய விக்ரம், பிரசாந்த் நீல் இயக்கத்தில் மான்ஸ்டராக தெறிக்கவிட ரெடியாக இருக்கிறாராம். இதுவரை இந்திய சினிமாவில் இப்படியொரு படம் வந்திருக்கக் கூடாது என்ற வகையில், மிக மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தாறுமாறாக உருவாகவுள்ளதாம் இந்த மூவி.
ஜூனியர் என்டிஆரின் NTR 31 முடிந்ததும் கமல் - பிரசாந்த் நீல் இணையும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கேஜிஎஃப் 3ம் பாகத்தை பிரசாந்த் நீல் இயக்குவாரா அல்லது வேறு இயக்குநர் இணைவாரா என்பதும் ரசிகர்களிடம் எதிர்பார்க்க வைத்துள்ளது. ஆனால், கேஜிஎஃப் 3ம் பாகத்தில் நான் இணைவது சந்தேகமே என பிரசாந்த் நீல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கமல் - பிரசாந்த் நீல் கூட்டணி பற்றிய அப்டேட் கோலிவுட் இயக்குநர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











