'கள்ளதுப்பாக்கி’ படத்தில் பெண் குரலில் பாடிய பாடகர்! - கமல் பாராட்டு!

சி.முருகேசன், சி.ரவிதேவ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் 'கள்ளத்துப்பாக்கி'.
இந்தப் படத்தை லோகிதாஸ் இயக்கி வருகிறார். சி.எஸ்.பாலு இசையமைக்கிறார்.
படத்தில் இடம்பெறும் ஒரு குத்துப் பாடலுக்கு பெண் பாடகியின் குரல் தேவைப்பட, அதற்கான தேடல் முயற்சியில் இருக்கும் போது, ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒருவர் பெண் குரலில் பாடுவதைப் பார்த்து அசந்து போனார்களாம்.
உடனே அவரை சென்னைக்கு வரவழைத்தார் தயாரிப்பாளர் ரவிதேவ். வந்தவர், கமல் நடித்த பல படங்களின் பாடல்களை பாடிக் காட்ட, இவர்தான் நாம் எதிர்ப்பார்த்த குரல் என்று அவரையே பாட வைத்து இன்ப அதிர்ச்சி தந்துள்ளனர்.
"மிட் நைட் கல்லூரி நான்... என் கில்லாடி ஸ்டுடண்ட் யாரு..." என்று துவங்கும் அந்தப் பாடலை அவரை பாட வைத்து பதிவு செய்த அன்றே, ராபர்ட் நடன இயக்கத்தில் நடிகை நிஷா மாணவர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போடுவது போல கடற்கரை பகுதியில் அந்தப் பாடலை படமாக்கி உள்ளார் இயக்குநர்.
இந்தப் பாடலை பாடியவர் கரந்தை பி. ராஜசேகரன். தஞ்சையில் சந்தோஷ் இசைக்குழு என்கிற அமைப்பை உருவாக்கி பல விழாக்களில் பாடி ரசிகர்களை கவர்ந்தவர். சன் டிவி, ராஜ் டிவி, கலைஞர் டிவி என எல்லா டிவி இசை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்றவர். அவரிடம் இந்தப் பாடலை பாடிய அனுபவம் குறித்து அவர் கூறுகையில், "நான் சினிமாவில் பாடுவேன் என்றெல்லாம் நினைக்கலைங்க.
சின்ன பையனா இருக்கும் போதிலிருந்தே பாடுவேன். பேசும் போது சாதாரணமா கேட்கிற வாய்ஸ், மைக் பிடித்து பாடினால் பெண் குரலில் கேட்க ஆரம்பித்தது. அது ஏன்னு இது வரைக்கும் தெரியலைங்க. அதிசயமா இருக்கு. காலேஜ்ல படிக்கும் போது “ராகவனே ரமணா..." பாடலை பாடுனேன்னா, எல்லோரும் அசந்து போய் கேட்ப்பாங்க.
சின்ன வயசுல ஹாபியா பாடுனது, அப்படியே இசைக்கச்சேரி வரைக்கும் போச்சுங்க. இப்போ இருபது வருஷமா மேடையில் பாடிகிட்டு இருக்கேங்க.
சன் டிவியில் கங்கை அமரன் சார் நடத்திய பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் பாடுனப்ப ஊரே உலகம் முழுக்க என்னோட திறமை தெரிஞ்சுதுங்க.
ஆரம்பத்துல நான் பெண் குரலில் பாடுவதை ரசிச்சாங்க. அதன் பிறகு இது நல்லா இருக்குமான்னு யோசிச்சேன். எனக்கு திருமணம் ஆனதும் என் மனைவி என்னை என்கரேஜ் பண்ணுனாங்க. அவுங்க தனியார் பள்ளியில் ஆசிரியரா இருக்காங்க. அதே மாதிரி என் பிள்ளகைளும் பாராட்டுறாங்க. என்னோட திறமையை அவுங்க என்கரேஜ் பண்றதாலதான் என்னால இன்னும் ஆர்வமா பாட முடியுது.
டிவி. நிகழ்ச்சியில் நான் பாடுறதை பார்த்த, இந்தப் படத்தோட தயாரிப்பாளர் ரவிதேவ், என்னை சென்னைக்கு வரவழைத்து, இந்தப் பாடலை பாடும்படி வாய்ப்புக் கொடுத்தார்.
நானே கமல் நடித்த பல படங்களின் பாடல்களை மேடையில் பாடியிருக்கேன். தயாரிப்பாளர் ரவிதேவ், கமல் சாரோட அசிஸ்டெண்ட். அதோடு கமல் சாரிடம் என்னையும் அழைத்துக் கொண்டு போய் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். அவரும் எங்கள் படக்குழுவை பாராட்டினார். இது மறக்க முடியாத அனுபவம்..," என்று நெகிழ்கிறார் கரந்தை பி.ராஜசேகரன்.


Click it and Unblock the Notifications











